பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா! மு.க.அழகிரி Vs மு.க.ஸ்டாலின்! தயாளு அம்மாள் நடத்திய பாசப்போராட்டம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், கருணாநிதி குடும்பத்தின் மொத்த உறவுகளும் கோபாலபுரம் இல்லத்தில் சங்கமமாகின.
தயாளு அம்மாளிடம் ஆசி பெறுவதற்காக பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள், என ஒரு பெரிய பட்டாளமே கோபாலபுரம் இல்லம் வந்து சென்றுள்ளன. கருணாநிதி உயிருடன் இருந்த போது கோபாலபுரம் இல்லம் எப்படி பரபரபாக இருக்குமோ, அதே பரபரப்பை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காண முடிந்தது.

தயாளு அம்மாள் வயது முப்பு காரணமாக வீட்டில் முழு ஓய்வில் இருந்து வரும் நிலையில் அவர் மனதில் நிறைவேறாத ஆசை ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. தனது மகன்கள் மு.க.அழகிரி -மு.க.ஸ்டாலின் இடையேயான மனக்கசப்பு அவருக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.
கருணாநிதி உயிருடன் இருந்த போதே மு.க.அழகிரியையும், மு.க.ஸ்டாலினையும் கரம் கோர்க்க வைக்க விரும்பினார் தயாளு அம்மாள். அதற்கான முயற்சிகளை ஒரு தாயாக அவர் முன்னெடுத்தார். ஆற்காடு வீராசாமி, செல்வி , முரசொலி செல்வம் ஆகியோர் மூலம் பிரிந்த அண்ணன் தம்பியை ஒன்று சேர்க்க விரும்பினார். ஆனால் காலம் அவ்வளவு எளிதாக அந்த முயற்சியை பலிக்க செய்யவில்லை.
கருணாநிதி இறந்த போது கூட அண்ணனும் தம்பியும் ஒருவருக்கு ஒருவர் சரியாக முகம் கொடுத்துக் கூட பேசிக்கொள்ளவில்லை. இது தயாளு அம்மாளை வெகுவாக கவலைக் கொள்ள வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மதுரையில் உள்ள மூத்த மகன் மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்று தயாளு அம்மாள் ஓய்வெடுத்திருக்கிறார். அழகிரியும் தாயார் வருகையை கொண்டாடித் தீர்த்து அவரை உடனிருந்து கவனித்துக் கொள்வார்.
மு.க.அழகிரியும் சரி, மு.க.ஸ்டாலினும் சரி தயாளு அம்மாள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர்கள். அதனால் தான் முதலமைச்சராக என்னதான் பிசியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தனது தாயாரை சந்தித்து அவரது உடல் நலத்தை கவனித்து வருகிறார் ஸ்டாலின். அதேபோல் மு.க.அழகிரியும் சில மாதங்களுக்கு முன்பு வரை தனது அம்மாவை பார்க்க எப்போது வேண்டுமானாலும் கோபாலபுரம் இல்லம் வந்து செல்வார். இப்போது தான் பெரியளவில் வெளியிடங்களுக்கு அவர் செல்வதில்லை.
இதனிடையே இன்று மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் ஒன்றாக கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து தாயாரிடம் ஆசிபெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது அவர்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும் நிகழ்வாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications