இன்றே கடைசி.. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.. தவறினால் இதுதான் நடக்குமாம்..!
ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இன்றே இணைக்க வேண்டும்
சென்னை: ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணோடு இணைப்பதற்கு இன்றைய தினமே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது... தவறினால் அபராதம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்பட்டு வருகிறது..
அதனுடன் ஆதார் நம்பரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: பிப்.23ல் விண்ணப்பம்... மே 21ல் தேர்வு - ஆதார் அவசியம்
இன்றே கடைசி
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது... இப்போது அந்த காலக்கெடு முடிவு பெறுகிறது.. கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட காலஅவகாசம் இன்றுடன் அதாவது வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது... இதுகுறித்து வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆதார் எண்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ந் தேதி (இன்று) கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும். அத்துடன் 31-ந் தேதிக்கு பிறகு அபராதம் செலுத்தித்தான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி இருக்கும். ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந் தேதிக்குள் இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும். அதன்பிறகு இணைப்பதற்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தினால்தான், பான் எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிமாற்றங்கள்
இதுகுறித்து நிபுணர்கள் சொல்லும்போது, "வங்கி கணக்கு தொடங்குதல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணக்கில் பணம் செலுத்துதல், அசையா சொத்துகள் வாங்குதல், பரஸ்பர நிதி பரிமாற்றம் போன்றவற்றுக்கு இந்த பான் நம்பர் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. ஒருவேளை இன்றுடன் நம்பர் செயலிழந்து விட்டால், எந்த பரிமாற்றங்களையும் செய்ய முடியாமல் போய்விடும்..
அபராதம்
அதனால், வரி செலுத்துவோர் தங்களது பான் நம்பருடன் ஆதார் நம்பரும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமானவரி வெப்சைட்டில் உடனடியாக சரிபார்த்துக்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளனர். ஆதாருடன் இணைக்கப்படாத பான் நம்பரை செயல்படாத நம்பராக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் மும்முரமாகி உள்ளனர்.. கடந்த ஆண்டு ஆதாருடன் பான் கார்டு இணைக்க நிதி மசோதா திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.