தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் SIR பணிகள் நீட்டிப்பு! டிசம்பர் 14 வரை அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம்
சென்னை: பீகாரைத் தொடர்ந்து இப்போது இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் SIR பணிகள் தமிழ்நாடு, குஜராத் உட்பட 6 மாநிலங்களில் நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 14 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்து, மேலும் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது.
பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதில் அங்குப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதையும் தாண்டியே இந்த சார் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சார் பணிகள்
போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், உயிரிழந்தோர் பெயர்களை நீக்கவே சார் பணிகளை மேற்கொள்வதாகத் தேர்தல் ஆணையம் கூறியது. பீகார் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சார் பணிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த மாநிலங்களில் எல்லாம் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை எவ்வளவு
அதன்படி இந்த மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 4ம் தேதி இதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த சார் பணிகளைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை நிரப்பித் தர வேண்டும். இதுவரை SIR பணிகளில் 99.55% படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் இதுவரை 6.38 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன
இன்றை கடைசி
இந்த சார் பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் நிலை அலுவலர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் சில மோசமான சம்பவங்களும் நடந்தது. இதையடுத்தே சார் பணிகள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இன்றுடன் சார் பணிகள் நிறைவடைகிறது. வாக்காளர்கள் தங்கள் SIR படிவங்களைச் சமர்ப்பிக்க இன்று (டிசம்பர் 11) கடைசி நாளாகும்.
இன்றைக்குள் படிவங்களைச் சமர்ப்பிக்காத வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 16ம் தேதி தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் தான் மாநிலத்தில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிய வரும் அதில் தங்கள் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டதாக யாரேனும் கருதினால் முறையீடு செய்யலாம்.
மும்முரம்
சிறப்புத் தீவிரச் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளத் தமிழ்நாட்டில் 66,470 பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 3,718 அலுவலர்கள் சார் பணிகளை மேற்கொண்டனர். இன்று கடைசி நாள் என்பதால் சார் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் இன்று அதிகளவில் விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு?
இதற்கிடையே சார் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஏற்கனவே கேரளாவில் சார் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 18ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாநிலங்களில் SIR பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், அந்தமான் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 14 வரை SIR படிவம் சமர்ப்பிக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரைவு வாக்காளார் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications