ஜூன் 14-ஐ மறக்க முடியுமா? செந்தில் பாலாஜி கைதாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு.. 38 முறை காவல் நீட்டிப்பு!
சென்னை: கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது முதல் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி கைதாகி இன்றுடன் 1 ஆண்டு முடிகிறது.
கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

செந்தில் பாலாஜி வழக்கு: இந்த புகாரில், செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.
உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே சமரசம் ஏற்பட முடியும். சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி கைது: உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்படும்போது போது திடீரென கடும் நெஞ்சு வலியால் அலறித் துடித்தார் செந்தில் பாலாஜி.
பைபாஸ் சர்ஜரி: இதையடுத்து, உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவர்கள், அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு ஆகியோரும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார்.
ஜாமீன் மறுப்பு: இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் கூறி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இறுதியாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது அமைச்சராக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், சமூகத்தில் அதிகாரம் படைத்தவராக இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது.
மேலும், தொடர் சட்டப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை 3 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன், அமலாக்கத்துறை ஆவணங்களை தனக்கு வழங்கும் வரை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். அவை வழங்கப்பட்ட நிலையில் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அதில் இல்லை, அந்த ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மீண்டும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
செந்தில் பாலாஜி கேட்டது கிடைக்குமா? இன்று தீர்ப்பு! என்ன மேட்டர்?
இன்றுடன் கைதாகி ஓராண்டு: இறுதியாக, 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காலை 38-வது முறையாக நீட்டித்து அண்மையில் உத்தவிட்டது நீதிமன்றம். இதன் மூலம் அவரது காவல் ஜூன் 14 ஆம் தேதியான இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவரது காவல் நீட்டிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும்.
கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கைதாகி இன்றோடு ஒரு வருடம் முடிகிறது. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணையில், இதுவரை ஜாமீன் கிடைக்காத நிலையிலும்,அமலாக்கத்துறை விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் மெதுவாகவே நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications