உயரப்போகும் சுங்கக் கட்டணம்..அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்..பொதுமக்கள் கவலை
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சுங்க கட்டண உயர்வால் லாரிகளின் வாடகை உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருப்பதற்கு லாரி உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
துவக்கத்தில் சுங்கச்சாவடிகளில் நேரடியாக பணத்தை செலுத்தி வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால், வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் ஏற்பட்டது.

600 சுங்கச்சாவடிகள்
தேவையற்ற நேர விரயமும் ஆனது. இப்போது அந்த நிலை மாறி, பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் நாம் காத்திருக்க வேண்டிய நேரமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கக் கட்டணங்கள் ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.

5 முதல் 10 % உயர்த்த பரிந்துரை
அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் சுங்க கட்டணத்தை 5 முதல் 10 % உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையின் படி, வரும் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் காருக்கு ரூ. 5 முதல் 15 வரை உயரலாம் என்று தெரிகிறது. தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் இருக்கும் பரனுர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமா?
இதனால், சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கட்டணம் ஆகக்கூடும். சுங்கச் சாவடி கட்டண உயர்வால் லாரி வாடகை உயரக்கூடும். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

32 சுங்கச்சாவடிகளை மூட கோரி
சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை . எனினும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. சுங்க கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களையும் கடுமையாக பாதிக்கும்
அதேபோல், சுங்கச்சாவடிகளில் 40 சதவீத கட்டணம் குறைக்கப்படும் என்றும் 60 கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் நகரப்பகுதிகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் அறிவித்து இருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுங்கச்சாவடி கட்டண உயர்வு வணிகர்கள், வாகன உரிமையாளர்களை மட்டும் இன்றி மக்களையும் கடுமையாக பாதிக்கும்" என்றனர்.












Click it and Unblock the Notifications