மோசமாகும் நிலைமை... தங்கம்போல் உயரும் தக்காளி விலை! தமிழகத்தில் தட்டுப்பாடு - என்ன காரணம்?
சென்னை: கோயம்பேடு சந்தைக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் இன்று கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தக்காளி டன் கணக்கில் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தக்காளி தட்டுப்பாடு
நேற்று வெறும் 42 லாரிகளில் மட்டுமே தக்காளி சென்னை கோயம்பேடு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. லாரிகளில் தக்காளி வந்தவுடனே வியாபாரிகள் அவற்றை வாங்கிச் சென்றதால் உடனடியாக தக்காளி காலியானது. இதனால் பலர் வெறும் கையுடன் திரும்பினர். இதன் காரணமாக பல பகுதிகளில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

விலை நிலவரம்
தக்காளி தட்டுப்பாடு காரணமாக சில்லறை கடைகளில் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.70 ஆக அதிகரித்து இருக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறி சந்தைகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளிலும் தக்காளி விலை ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனையாகி வருகிறது.

கோடை மழை
ஒரு பெட்டி தக்காளி ரூ.550க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.700 க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் குறைவான அளவிலேயே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஆந்திரா, கர்நாடகா
இதன் காரணமாக வியாபாரிகள் நேரடியாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று தக்காளியை வாங்கி தமிழ்நாடு கொண்டு வந்தனர். ஆனால், அசானி புயல் காரணமாக ஆந்திராவிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications