தக்காளி விலை மீண்டும் சரிவு.. கோயம்பேடு மார்க்கெட்டில் பாதியாக குறைந்த விலை! என்ன காரணம்?
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை சரிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனையில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.70 வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் தக்காளி வரத்து குறைந்து கடந்த 2 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ.70 - ரூ. 80 ஆக உயர்ந்தது. சில்லறை விற்பனையில் ரூ. 100 வரை தக்காளி விற்பனையானது.
சமையல்களில் முக்கிய இடம் பிடிப்பது தக்காளி, வெங்காயம் தான். இவை இரண்டும் இல்லாத சமையலே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் தக்காளி விலையேற்றம் இல்லத்தரசிகளையும், பொதுமக்களையும் கலக்கமடையச் செய்தது.
இந்நிலையில் தக்காளி விலை மீண்டும் சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ. 80க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ. 45 க்கு விற்பனை ஆகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. தக்காளி விலை பாதியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications