‛‛நாளை நீங்களே ஆளுநர் ஆகலாம்’’.. சட்டசபையில் நயினார் நாகேந்திரனை கலாய்த்த சபாநாயகர் அப்பாவு.. கலகல
சென்னை: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை பார்த்து ‛‛நாளை நீங்களே ஆளுநர் ஆகலாம்'' என கையை விரித்து சபாநாயகர் அப்பாவு கூறியது சபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்நிலையில் இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்து வருகிறது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அந்த தனித்தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது தனித்தீர்மானம் மீது மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும். நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும். குடியரசு தலைவர், நீதிமன்றங்கள், ஆளுநர்கள் பற்றியோ எந்த விதமாக கருத்துக்களையும் சொல்ல வேண்டியதில்லை. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏற்கனவே உங்களுக்கு இது தெரிந்த ஒன்று தான். ஆகவே நம்முடைய முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் உள்பட பிற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பேசி 10 மசோதாக்களை மறுஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வேளையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛பேரவைத்தலைவரே, இன்றைக்கு முதல்வர் கொண்ட வந்த தீர்மானத்தின் மீது பேசும்போது நீங்கள் கூட ஆரம்பத்திலேயே சொன்னீர்கள். இதில் மத்திய அரசையோ, ஆளுநரையோ யாரையும் குறைத்து பேசக்கூடாது என்றீர்கள்'' என்றார். இந்த வேளையில் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ‛‛குடியரசு தலைவர், நீதிமன்றங்கள், ஆளுநர்'' என்றார்.

இதையடுத்து நயினார் நாகேந்திரன், ‛‛ஆளுநரை பற்றி பேசக்கூடாது என சொல்லி இருந்தீர்கள். பேசக்கூடாது என சொல்லிவிட்டு பேசவிட்டு கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்'' என்றார். அப்போது குறுக்கிட்ட அப்பாவு, ‛‛ஒரு நிமிடம்.. கோப்புகள் தொடர்பாக அவர் எடுத்த முடிவுகளை பற்றி தான் பேசுகிறார்களே தவிர.. தனிப்பட்ட முறையில் பேசிய வார்த்தைகள் எதுவும் பதிவாகவில்லை'' என்றார்.
அதை கேட்ட நயினார் நாகேந்திரன், ‛‛தீர்மானங்கள் என்பது வேறு. ஆளுநர் திருப்பிய அனுப்பியதால் முதல்வர் தனித்தீர்மானம் கொண்டு வந்தது என்பது வேறு. அதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது வேறு'' என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‛‛எந்த ஆளுநர் கையெழுத்திட்டு திருப்பி அனுப்பினார்களோ? அந்த கருத்தை தான் சொல்லி இருக்கிறார்கள். ஆளுநர் என்பவர்கள் மாறலாம். நாளைக்கு நீங்களே ஆளுநர் ஆகலாம்'' எனக்கூறிவிட்டு கையை விரித்து சிரித்தார். இதை கேட்ட பிற உறுப்பினர்கள் சிரித்தனர். நயினார் நாகேந்திரனும் சிரித்தபடி தனது பேச்சை தொடர்ந்தார்.












Click it and Unblock the Notifications