எல்லாமே சென்னையில்.. ஷாக்! தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு 21 பேர் மரணம்!
சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 21 பேரும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 307ல் 244 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 15 பேர், திருவள்ளூரில் 15 பேர், காஞ்சிபுரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 274 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை எப்படி
தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தமே இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லா ஊர்களிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். வேலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 286 பேரில் பலர் 40 வயதை கடந்தவர்கள் ஆவர். குறிப்பாக உயிரிழந்தவர்களில் பலர் 50 முதல் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு உடலில் ஏற்கனவே நோய் தொறறு இருந்திருக்கிறது. இந்த நோய் தொற்றுடன் கொரோனாவும் சேர்ந்ததால் மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, சுவாச பிரச்சனை ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளார்கள்.

சென்னையில் எல்லாமே
ஜுன் 9ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 21 பேர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 21 பேரும் செனையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இளம் வயதில் உயிரிழப்பு
தமிழகத்தில் 21 பேர் சென்னையில் இறந்தாலும் அதில் ஒருவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஆவர். அண்மையில் 20 வயது கர்ப்பிணி பலியான நிலையில் நேற்று 22 வயது இளம் வயது நபர் பலியாகி இருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், 30 வயதுநபர் எந்த உடல் பாதிப்பும் இல்லாமல், தீவிர கொரோனாவால் சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளம் வயது மரணங்கள் தினமும் ஏற்பட்டு வருவது கலக்கத்தை உருவாக்கி உள்ளது.

கொரோனாவால் மரணம்
சென்னையில் 30 வயது நபர், 71 வயது முதியவர், 85 வயது முதியவர், 56 வயது முதியவர், 47 வயது ஆண், 53வயது ஆண்(திருவள்ளூர்). 52 வயது ஆண், 39 வயது ஆண், 63 வயது ஆண், 90 வயது ஆண், 75 வயது ஆண், 74 வயது பெண், 78 வயது ஆண், 72 வயது ஆண், 52 வயது ஆண், 72 வயது ஆண், 53 வயது ஆண், 64 வயது பெண், 84 வயது ஆண், 60 வயது ஆண், 54 வயது ஆண், ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 21 பேரில் 2 பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். உயிரிழப்புக்கு கொரோனாதான் முக்கிய காரணம் என்றாலும், உடலில் பல்வேறு நோய் தொற்று உள்ளவர்களுக்கு மரணத்திற்கான வாய்ப்புகளை கொரோனா அதிகரித்திருப்பதை சுகாதாரத்துறை புள்ளி விவர அறிக்கை காட்டுகிறது. எனவே நோய் வாய்ப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வெளியில் சென்றால் முககவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவதை கட்டாயம் ஆக்கிக்கொண்டால் ஓரளவு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications