2 ஆண்டுகளில் 35 லட்சம் குழந்தைகள் பலன்!.. ‘இல்லம் தேடிக் கல்வி’ மாபெரும் சக்சஸ்!
சென்னை: 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் பல அதிரடியான மாற்றங்களைப் பள்ளிக் கல்வித்துறை அடைந்திருக்கிறது.
இத்திட்டத்தினை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி மரக்காணம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பள்ளிக்கல்வித்துறைக்கு மிக நெருக்கடியான காலகட்டம். கொரோனா பெருந்தொற்று உலகையே முடக்கிப் போட்டதில், பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடியாமல் குழந்தைகள் வீட்டிற்குள்ளாகவே முடங்கப்பட்டனர்.
அவர்களின் கற்றல் இடைவெளி என்பது அதிகரித்தது. எதிர்காலத்தில் இந்த இடைவெளி மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறலாம் என உலக அளவிலான பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்தன.

அதை மிகச் சரியாக உணர்ந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், இந்தக் கற்றல் இடைவெளியைக் குறைக்க 'இல்லம் தேடிக் கல்வி'யை அறிமுகப்படுத்தினார். அதற்கு 'பள்ளியைத்தாண்டி வகுப்பறையை விரிவுபடுத்துவது' என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது சிலர் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சித்தனர். ஆனால், இன்றைக்கு இத்திட்டத்தால், கிட்டத்தட்ட 92 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் உள்ள 34,05,856 அரசுப்பள்ளி மாணவர்கள் இதன் மூலம் பலனடைந்துள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆரம்பத்தில் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் இலக்காக இருந்தது. ஆகவே, சில மாதங்களுக்குப் பிறகு இதன் சேவையை அரசு நிறுத்தவும் திட்டமிட்டிருந்தது.

அந்த நேரத்தில்தான் மாலை நேரங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு டியூஷன் வைக்க வசதி இல்லாத ஏழை, எளிய பெற்றோர்கள் இதனை நடப்பு ஆண்டுக்கும் தொடர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதை மனதில் வைத்து மீண்டும் இத்திட்டம் நடப்பாண்டு தொடரும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
மேலும் அவர், ஐ.நா. சபையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் குறித்துப் பேசப் பட்டுள்ளதாக ஒரு தகவலைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வு, இல்லம் தேடிக் கல்வித் திட்டமானது கற்றல் இடைவெளியிலிருந்த தடைகளைத் தகர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஆகவே இதனை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்தது.
அந்த ஆய்வானது 'Covid-19 Learning Loss and Recovery: Panel Data Evidence from India' என்ற தலைப்பில் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட 'இல்லம் தேடிக் கல்வி' மூலம் கடந்த 6 மாதங்களில் பன்மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை எல்லாம் கடந்து மலைக்கிராமங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சாதிய பாகுபாடுகள் மிகக் குறைந்துள்ளது என்கிறார்கள் இதன் ஒரு பகுதியாக உள்ள தன்னார்வலர்கள்.

இத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 2 லட்சம் தன்னார்வலர்கள், 35 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர்.
பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் 1 முதல் 1;30 மணிநேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு இந்தக் கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மதுரையில் மட்டும் 5,800 மையங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. 7,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு ஆதரவளிக்க ஆர்வமுள்ள 10,000 தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். 99402 55455 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், அரசு தன்னார்வலர்கள் மூலம் குழந்தைகளுக்கு வீடு தேடி வந்து கல்வியைக் கற்றுத்தர ஏற்பாடு செய்துவிடும். ஆகவே பெரிய அளவில் அலைச்சல் இல்லை.

தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும்படி இந்தத் தன்னார்வலர்கள் ஆலோசனை வழங்கியதன் மூலம் 11 இலட்சம் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளியைப் பற்றிய விழிப்புணர்வு பன்மடங்கு பெற்றோரிடத்தில் அதிகரித்துள்ளதையே இந்த எண்ணிக்கை எடுத்துக் கூறுகிறது.
2023-24 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக 60,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்தத் தன்னார்வலர்கள் சுமார் 4,33,353 மாணவர்களை நேரடியாகச் சந்தித்துள்ளனர் என அரசு அளித்துள்ள விளக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.

இவ்வளவு சிறப்புகளையும் உணர்ந்ததால்தான் மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சனை இத்திட்டம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர் கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து மு.க.ஸ்டாலின், 'கல்வியும் மருத்துவமும் இந்த அரசின் இரு கண்கள்' என்று அடிக்கடி கூறிவருகிறார். 'இல்லம் தேடிக் கல்வி' குறித்துப் பேசுகையில் அவர், "சின்னதா ஒரு SUPPORT, சின்னதா ஒரு MOTIVATION, அது போதும், நம்ம தமிழ்நாட்டு மாணவர்கள் அடிச்சு தூள் கிளப்பிடுவாங்க! அது மாதிரியான தூண்டுதல்கள்தான் இல்லம் தேடிக் கல்வி" என விளக்கம் அளித்துள்ளார்.

இந்தத் திட்டம் நகரப்புறங்களைவிட மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு மாபெரும் மருந்தாக அமைந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏனெனில் சரியான சாலை வசதி இல்லாத அந்தப் பகுதி பிள்ளைகள் வீட்டிலிருந்தபடியே தரமான கல்வி வசதியைப் பெற்றுள்ளனர்.
மதுரைக்கார பெண்மணி உமா மகேஸ்வரி. இவரது மகள் கீர்த்திகா. இவர் மதுரை கல்லணையில் உள்ள அரசுப் பள்ளியில் மகள் படித்து வருகிறார்.
இல்லம் தேடிக் கல்வி குறித்து உமா பேசும்போது, "என் மகள் தினம் ஸ்கூலுக்குப் போய் வந்ததும் மாலை 5:30 மணிக்கு மேல் இல்லம் தேடிக் கல்விக்குப் போகிறாள். அவள் இந்த வகுப்புக்குப் போகத் தொடங்கிய பிறகு நல்ல மாற்றம் தெரிகிறது. படிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறாள். நன்றாக ஆடுகிறாள், பாடுகிறாள். பாடங்களை ரசித்துப் படிக்கிறாள். அதை என்னால் உணர முடிகிறது" என்கிறார் இந்தத் தாய்

மதுரையில் உள்ள தனது எளிமையான வீட்டையே ப்ளே ஸ்கூல் மாதிரி படங்களை வரைந்து மிக அழகாக மாற்றி இருக்கிறார் தன்னார்வலர் நல்லம்மாள். அவர் என்ன சொல்கிறார்?
"குழந்தைகளுக்கு வெறுமனே பாடத்தை நடத்தாமல், அந்தப் பாடத்தை டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அப்படித்தான் நான் சத்தம் போட்டு, பாட்டு, டான்ஸ் எல்லாம் ஆடி சொல்லித் தருகிறேன்.
ஆரம்பத்தில் என்னிடம் பிள்ளைகளை அனுப்பப் பெற்றோர்கள் தயங்கினர். பிறகு என் வகுப்பறையைப் பார்த்து, நான் சொல்லிக் கொடுக்கும் முறையைப் பார்த்துவிட்டு பலர் என்னிடம் பிள்ளைகளைவிட ஆரம்பித்தனர்.
பிள்ளைகளுக்குக் கல்விதான் முக்கியம். அது எங்குக் கிடைத்தால் என்ன? என்பதை அவர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். நான் பாட்டுப் பாடி நடத்துவதை அக்கம் பக்கம் உள்ள குழந்தைகள் முதலில் வந்து ஆர்வத்துடன் எட்டி எட்டிப் பார்த்தார்கள். பிறகு பெற்றோரைக் கட்டாயப்படுத்தி அவர்களாகவே வந்து சேர்ந்துவிட்டார்கள்" என்கிறார்

"நானும் அரசுப் பள்ளியில் படித்தவள்தான். ஆகவே அங்கே எனக்கு ஓவியம், நடனம், நாடகம், பாட்டு, பாவைக்கூத்து எனப் பல விசயங்களை ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர். ஆகவே அந்த அனுபவத்தைக் கொண்டு நானே என் வகுப்பறையைக் கலாபூர்வமாக மாற்றி வைத்திருக்கிறேன். அது குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ளது" என்கிறார்.
இந்தப் பெற்றோரின் குரலையே ஜெயரஞ்சனின் அறிக்கையும் பதிவு செய்துள்ளது. இத்திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழித் திறன்களைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்கிறது அவரது பகுப்பாய்வு.

மேலும் இக்கல்வி முறையில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் கற்றலையும் கற்பித்தலையும் ஆக்கப்பூர்வமாக மாற்ற உதவி உள்ளதாகவும் கூறுகிறது. கற்றலை எளிமையாக்கியதுடன் அதைச் சுவாரஸ்யமாகவும் மாற்றி இருக்கிறது என்கிறது ஜெயரஞ்சன் அறிக்கை.
சுருக்கமாகச் சொன்னால், இந்தத் திட்டம் அடித்தட்டு மக்களின் அறிவாயுதம்!












Click it and Unblock the Notifications