AI தொழில்நுட்பத்தில் கருணாநிதி! ஹைடெக் முறையில் திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம்!
சென்னை: டி.ஆர்.பாலு புத்தக வெளியீட்டு விழாவில், AI தொழில்நுட்பத்தில் கருணாநிதியை பேச வைத்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கான முன்னோட்டத்தை பார்த்துள்ளது திமுக தலைமை.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய ''பாதை மாறாப் பயணம்'' என்ற புத்தகத்தின் 3ஆம் பாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன் தினம் வெளியிட்டர். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதற்கு முன்னதாக, மறைந்த கருணாநிதியை AI தொழில்நுட்பத்தில் பேச வைத்து வியப்பை ஏற்படுத்தினார் டி.ஆர்.பாலு.

கருணாநிதியின் குரல் அச்சு அசலாக இருந்த போதிலும் உருவ அமைப்பில் மட்டும் மாற்றங்கள் இருப்பது கண்கூடாக தெரிந்தது. இருப்பினும் கருணாநிதியே வீடியோவில் பேசுவது போன்ற நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கருணாநிதியின் பிரச்சார உரையை AI தொழில்நுட்பத்தில் தயார் செய்தால் என்ன என்ற யோசனையில் உள்ளதாம் திமுக தலைமை.
இதனிடையே இந்த யோசனையை செயற்பாட்டுக்கு கொண்டு வருவது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. டி.ஆர்.பாலு புத்தக வெளியீட்டு விழாவில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட கருணாநிதி வீடியோவில், ஸ்டாலினை அவர் வெகுவாக பாராட்டுவது போன்ற வரிகள் அதிகம் இடம்பெற்றிருந்தன. வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து கருணாநிதி பாராட்டுவது போன்ற வீடியோ வெளியானாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
திமுகவை பொறுத்தவரை காலத்திற்கேற்ப கட்சியில் புதுமைகளை புகுத்தி ஹைடெக் முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம். சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கியது முதல் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கியது முதல் கடந்த காலங்களில் எல்லாம் திமுக தன்னை அப்டேட் செய்து கொண்டது. அண்மையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் கூட, வெளிநாடுகளை போல் ட்ரோன் ஷோ மூலம் வானில் திராவிட இயக்கத் தலைவர்களின் உருவங்கள் ஜொலிக்க வைக்கப்பட்டது. இதனால் தேர்தல் பிரச்சாரத்திலும் பல்வேறு புதுமைகளை திமுக புகுத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது.












Click it and Unblock the Notifications