விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் குவிந்த மக்கள்! இந்த வழியா போகாதீங்க.. போலீஸ் அட்வைஸ்
சென்னை: தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. எனவே கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகம் ஏராளமான அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் தனிச்சிறப்பு மிக்கவர். திரைப்படங்களில் பேசும் வசனங்களை அவர் மக்கள் மத்தியிலும் பேசியதே இந்த சிறப்புக்கு காரணம். இது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்படித்தான் அவர் தேமுதிக எனும் கட்சியை உருவாக்கினார். கட்சியை தொடங்கிய ஒரே ஆண்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் நுழைந்தார் அவர்.

சிறந்த எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இவருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு, அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சரிவு, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 2016ல் மக்கள் நல கூட்டணியில் நின்று தேர்தலில் தோல்வி என அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒரு கட்டத்தில் அவர் முற்றிலுமாக வெளியேறினார். அரசியல் தோல்வி ஒருபுறம் எனில், உடலும் ஒத்துழைக்காமல் இழுத்தடித்தது.
வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பார்த்தார். பெரிய அளவில் பலன் இல்லை. அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வந்தார் விஜயகாந்த். கடந்த மாதம் 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குணமடைந்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
பின்னர் நடந்த கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அவரது உடல்நிலையை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டனர். இந்நிலையில் தான் செவ்வாய்க்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார்" என தெரிவிக்கப்பட்டது.
இன்று வெளியான அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது உடல்நிலை பற்றி கேள்விப்பட்டு தொண்டர்கள் பதற்றமடைந்தனர். தேமுதிக நிர்வாகிகள் பலரும் விஜயகாந்த் வீட்டிற்கு முன்பாக குவிந்தனர். இதனையடுத்து மியாட் மருத்துவமனை முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இது திரை உலகினருக்கும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் தற்போது கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கோயம்பேடு 100 சாலை வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications