'கல்வி தான் ஒரே ஆயுதம்..' கணக்கில் சந்தேகம் கேட்ட சாலையோர சிறுமி.. பாடம் எடுத்த போலீஸ்.. நெகிழ்ச்சி!
சென்னை: ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சாலையோர சிறுமி ஒருவருக்கு டிராபிக் போலீஸ் ஆசிரியராக மாறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கடந்த 2 ஆண்டுகளாகவே நம்மை பாடாய் படுத்தி வருவது கொரோனா தான். சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா உலகின் அனைத்து நாடுகளையும் கதிகலங்கச் செய்துவிட்டது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற உலகின் வளர்ந்த நாடுகள் கூட கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொடர்ந்து அலை அலையாகப் பொதுமக்களைத் தாக்குவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பிறகு ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா காரணமாக இப்போது உலகெங்கும் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியா
இந்தியாவிலும் பல மாதங்களுக்குப் பிறகு வைரஸ் பாதிப்பு மீண்டும் மேல்நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா காரணமாகத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பெரும்பாலும் லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்றாலும் கூட, மிகவும் அதிகப்படியான நபருக்கு கொரோனா உறுதியாகும் போது மருத்துவக் கட்டமைப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் செல்ல தொடங்குகிறது.

பள்ளிகள்
இதற்காகத் தமிழ்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இன்னும் எந்தவொரு வேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் தமிழக அரசு 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமில்லை. இந்தியாவிலேயே பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் கடந்த 2020 மார்ச் மாதம் முதலே மூடப்பட்டே உள்ளது.

ஆன்லைன் கல்வியால் பாகுபாடு
இடையில் சில வாரங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்குவதால் மீண்டும் மீண்டும் பள்ளிகள் மூடப்படுகிறது. இதுபோன்ற நாட்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆன்லைன் கல்வி என்பது படித்த நகர்ப்புற வசதியான மக்களுக்கு ஏற்றதாக இருந்தாலும் கூட மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். உலக சுகாதார அமைப்பும் கூட ஆன்லைன் கல்வி பாகுபாட்டை ஏற்படுத்துவதால் விரைவாக நேரடி வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்றே தெரிவித்து வந்தது.

ஆசிரியராக மாறிய டிராபிக் போலீஸ்
இந்தச் சூழலில் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சாலையோர சிறுமி ஒருவருக்கு டிராபிக் போலீஸ் ஆசிரியராக மாறியுள்ளார். இது எதோ வெளிநாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ நடந்த நிகழ்வு இல்லை. நமது சென்னையில் நடந்த நிகழ்வு! சென்னை பிராட்வே பகுதியில்தான் 7ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அங்கு இருக்கும் டிராபிக் போலீஸ் ஒருவர் கல்வி கற்க உதவி செய்து வருகிறார்.

டிராபிக் போலீஸ்
பிராட்வே பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் மாணவி தீபிகா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இவரால் கணக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பொதுமக்களுக்கு ஒரு தேவை என்றால் எப்படி போலீஸ் உதவிக்கு வருமோ. அதேபோலத் தான் சிறுமி தீபிகாவுக்கும் உதவியுள்ளார் அங்குள்ள டிராபிக் போலீஸ் எஸ் மகேந்திரா.

கல்வி தான் ஒரே ஆயுதம்
அதுவும் எதோ சில நாட்கள் மட்டுமில்லை. கடந்த ஓர் ஆண்டாகவே சிறுமி தீபிகாவுக்கு கணக்கு பாடத்தில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் மகேந்திரா தான் தீர்த்து வைத்து வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்வி மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரே ஆயுதம் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த நிலையிலும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சிறுமிக்கு ஆசிரியராக மாறிய மகேந்திராவை நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications