சபாஷ்... சரியான முடிவு... சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் டிராஃபிக் ராமசாமி..!
சென்னை: சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் திட்டத்தில் இருக்கிறார்.
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் டிராபிஃக் ராமசாமியை போட்டியிடக் கோரி ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை வலியுறுத்தி வருகின்றனர்.
Recommended Video

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

சமூக ஆர்வலர்
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு பொதுநல வழக்குக்களை தொடர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். பெரிய படை பரிவாரங்களோ, பண பலமோ டிராபிஃக் ராமசாமியிடம் இல்லை. அவரிடம் இருக்கும் சொத்து என்றால் அது மனு எழுதுவதற்கான காகிதங்களும், பேனாக்களும் தான். ஆனால் அப்படியிருந்தும் எதிராளிகளை பல நேரங்களில் விழி பிதுங்க வைத்துள்ளார்.

தனி ஒருவன்
தனி ஒருவனாக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் டிராபிஃக் ராமசாமிக்கு இளைஞர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு உள்ளது. ஆனால் இந்த ஆதரவு ஓட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி தான். இந்நிலையில் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் டிராபிக் ராமசாமியை சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுமாறு அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

திருச்சியில் பிரச்சாரம்
இது தொடர்பாக பரிசீலித்து வரும் அவர் அதிமுகவுக்கு எதிராக திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் திட்டத்திலும் இருக்கிறார். காரணம் பேனர் விவகாரத்தில் அதிமுகவினருக்கும் டிராபிஃக் ராமசாமிக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். அது ஜெயலலிதா காலத்தில் இருந்தே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

நில ஆக்கிரமிப்பு
ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை கையில் எடுத்து வழக்குத் தொடர்ந்து வந்த இவர், இப்போது தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கியுள்ளார். நில ஆக்கிரமிப்பு, விதிமுறை மீறல், உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் இவரை யார் அனுகினாலும் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தொடங்குவார். இதன் காரணமாகவே சமீப காலங்களில் இவர் மாநிலம் தழுவிய அளவில் பரிச்சயம் பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications