தந்தையை மிரட்டப் போய் விபரீதம்.. பைக் கேட்டு அடம்பிடித்த சென்னை இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்!
சென்னை: சென்னை மதுரவாயல் அருகே தந்தையிடம் பைக் வாங்கி தர கேட்டு அடம் பிடித்த மகன், தந்தையை மிரட்டுவதற்காக பெட்ரோல் ஊற்றிக் கொண்டபோது எதிர்பாராவிதமாக தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கட்டிடக் கழிவுகளை தரம் பிரிக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு 19 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார். தந்தைக்கு உதவியாக இருந்த ஜீவா, தனக்கு பைக் வாங்கி தருமாறு பலமுறை தந்தை முருகனிடம் கேட்டுள்ளார்.

ஆனால், பைக் வாங்கி தராததால் நேற்று முன்தினம் முருகன் வேலை செய்யும் மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அவரது ஷெட்டிற்கு சென்ற ஜீவா, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த கேனில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு, பைக் வாங்கி தரவில்லை என்றால் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து விடுவேன் என தந்தையை மிரட்டி உள்ளார்.
சற்று நேரத்தில் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவா கையில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு, அருகே குளிர் காய்வதற்காக மூட்டி வைக்கப்பட்டிருந்த தீயின் அருகே சென்று தீயில் இறங்கிவிடுவேன் என கூறியுள்ளார்.
தந்தையை மிரட்டுவதற்காக ஜீவா தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக தீ சட்டென்று ஜீவாவின் உடலில் பற்றியது. இதையடுத்து செய்வதறியாத திகைத்து இருந்த முருகன் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மணல் மற்றும் துணியைக் கொண்டு தீயை அணைத்தனர்.
உடனடியாக ஜீவாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications