நாளை முதல் உயரும் ரயில் கட்டணம்.. ரயில்வே வாரியம் திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை: நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ள நிலையில், இந்தக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த நீண்ட நாட்களாக ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில், இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏசி அல்லாத விரைவு ரயில் பெட்டிகளில் 500 கி.மீ வரை கட்டண உயர்வு இல்லை. 501 - 1500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 5 உயர்கிறது. 1501 - 2500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்கிறது. 2500 - 3000 கி.மீட்டர் வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.15 உயர்கிறது.
ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. NON AC ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி: 1, 2, 3 வகுப்புகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி விரைவு ரயில்களில் முதல் வகுப்பு, 2 டயர், 3 டயர், ஏசி சேர் கார் வகுப்புகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பில் இருந்து முதல் வகுப்பு வரையிலான அனைத்து ஏசி பெட்டிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ள நிலையில், இந்தக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும், சாதாரண தொடர்வண்டிகளில் 500 கி.மீ வரையிலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், விரைவு வண்டிகளில் சாதாரண வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயண தூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித் துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications