வட்டமாக நின்று.. கும்மியடித்து.. பாட்டுபாடி... மனசு உருகி.. சுஜித்துக்காக பிரார்த்தித்த திருநங்கைகள்
சுஜித் மீண்டு வர திருநங்கைகள் பிரார்த்தனை செய்தனர்
Recommended Video
சென்னை: "அய்யய்யோ அய்யய்யோ.." என ஒப்பாரி வைத்து கொண்டே ஓட்டேரி மக்கள் சுஜித்துக்காக குரல் கொடுத்தனர். அதேபோல, புதுக்கோட்டை திருநங்கைகள் வட்டமாக நின்று கொண்டு கும்மி அடித்து... பாட்டு பாடி சுஜித் விரைவில் மீண்டு வர கோயிலில் பிரார்த்தனை செய்தனர்
குழந்தை சுர்ஜித்திற்காக தமிழக மக்கள் பேரணி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சுர்ஜித் மீண்டு வந்து தாயுடன் சேரவேண்டும் எனக்கூறி சென்னை ஓட்டேரி எஸ்எஸ்புரம் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நீ நிமிர்ந்து நில் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது சுர்ஜித் மீண்டு வரவேண்டும் எனக்கூறி கோஷமிட்டனர்.
ஏசுநாதர் கோவிலில்
மேலும் ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் அமைந்துள்ள ஏசுநாதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தங்களது பகுதியிலிருந்து "அய்யய்யோ அய்யய்யோ" என கோஷமிட்டவாறு ஆக்ரோஷத்துடன் அப்பகுதி மக்கள் வந்ததுடன், குழந்தையை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மீண்டு வந்தால் மகிழ்ச்சி
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. "கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தை மீட்டு தாயிடம் ஒப்படைத்தால் தான் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஈர நெஞ்சம் அறக்கட்டளை
அதேபோல, பொன்னேரியில் கிறிஸ்தவ அமைப்புகள், கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை என பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த வேண்டுதலில் திருநங்கைகளும் இணைந்துள்ளனர். புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருநங்கைகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருநங்கைகள்
புதுக்கோட்டை திருநங்கைகள் அமைப்பு மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் நடைபெற்ற இந்த பிரார்த்தனைக்கு மாவட்ட தலைவர் அசினா தலைமை தாங்கினார். ஷிவானி உட்பட 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
கோவிலுக்குள் கும்மி
கோயிலுக்குள் இவர்கள் அனைவரும் வட்டமாக சுற்றி நின்று, கும்மியடித்து, பாட்டு பாடிக் கொண்டே பிரார்த்தனையை செய்தனர். இதையடுத்து அவர்கள் கூறும்போது,"சுஜித் உயிருடன் மீண்டு வருவான் என நாங்க எல்லாரும் எதிர்பார்க்கின்றோம்" என்றனர்.