சென்னை மக்களே அலர்ட்.. கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் நாளை ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (நவம்பர் 17) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ள நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நாளை 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலை, தொழிலுக்காக வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள விஷயம் என்றால் அது மின்சார ரயில் சேவைதான். பயணிகளின் போக்குவரத்துக்கு இது பெரிதும் உதவிகரமாக இயங்கி வருகிறது. இந்த ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் காலை மற்றும் மாலை நேரங்களான பீக் ஹவர்களில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்து விடும் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு பயணிகள் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது மின்சார ரயில் சேவை.
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும்.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பராமரிப்பு பணிகளும் நடைபெறும். பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17 ஆம் தேதி தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை வரும் நவம்பர் 17 ஆம் தேதி ரத்து செய்யபட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த நேரத்தில் கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கவுள்ளது. எனவே, இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் ரயில்கள் நாளை பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தியாகராய நகருக்கு 20 பேருந்துகள், பிராட்வேக்கு 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications