ஜன.,9ம் தேதி முதல் பஸ்கள் ஓடாது.. ஸ்டிரைக் அறிவித்த போக்குவரத்து ஊழியர்கள்! பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் 9ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதனால் பொங்கலுக்கு மக்கள் வெளியூருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களில் தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களில் இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆனால், போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை.
இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் சௌந்தரராஜன் கூறுகையில், "நாங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வந்தது. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால் எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் எந்த பதிலும் இல்லை. அமைச்சர் பொங்கல் வரை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே இந்த பொங்கலாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பான பொங்கலாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications