காலமானார் சங்கரய்யா.. பேரிழப்பு.. கண்ணீரில் தோழர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா மறைவு தோழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தோழர் சங்கரய்யா: 1922ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி கோவில்பட்டியில் பிறந்த சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாப சந்திரன். மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்து கொண்டார். மாணவப்பருவத்திலேயே போராட்டங்களில் பங்கேற்றவர் சங்கரய்யா. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றதால் கல்லூரி தேர்வை எழுத முடியாமல் போனது.

இந்திய சுதந்திரத்திற்கு முதல் நாள் தான் சங்கரய்யா விடுதலையானார். சுதந்திர இந்தியாவில் முன்பைவிட அதிக பொறுப்புகளுடன் பணியாற்றினார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும், உயர் பொறுப்புகள் வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக, அனைத்திந்திய நிர்வாகி, 1967, 1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
சங்கரய்யாவின் சமூகத்திற்கான பணிகளை பாராட்டி, கடந்த 2021ம் ஆண்டு தகைசால் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதுடன் வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் சங்கரய்யா.
102 வயதான சங்கரய்யா சென்னை அப்பலோ மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல், சளி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலையில் காலமானார். சங்கரய்யாவின் மரண செய்தி கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு உறவினர்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், தலைவர்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications