ஆ.ராசாவை திமுகவில் சேர்த்துவிட்டது யார் தெரியுமா? திருச்சி சிவா எம்பி பகிர்ந்த சுவாரஸ்ய ஃபிளாஷ்பேக்!
சென்னை: ஆ.ராசாவை திமுகவில் சேர்த்ததே நான் தான் எனக் கூறியிருக்கிறார் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா.
ஆ.ராசா ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்ததாகவும் அங்கிருந்தால் எதுவும் சாதிக்க முடியாது எனக் கூறி தாம் தான் அவரை திமுகவில் சேர்த்துவிட்டேன் எனவும் கூறினார்.

சமூகத்தை மாற்ற என்னதான் தனிமனிதனாக போராடினாலும் அதிகாரம் இருந்தால் தான் எதுவும் சாத்தியம் என்பதை ஆ.ராசாவுக்கு புரிய வைத்ததாக கூறினார் திருச்சி சிவா.
ஆ.ராசா திராவிடர் கழகத்தில் மாணவரணிச் செயலாளராக இருந்த போது அவரை திமுகவில் இணைய தாம் அழைப்பு விடுத்ததாகவும் அப்போது ராசா தயங்கியதால் ஒரு எடுத்துக்காட்டு ஒன்றை கூறி மனதை மாற்றியதாகவும் கூறினார்.
அதாவது சாலையில் ஆயிரம் பேர் திரண்டு நின்று மறித்தாலும் தைரியமான இளைஞன் ஒருவன் வாகனத்தை நிறுத்தாமல் முன்னேறி வந்தால் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் வாகனங்களை முன்னேற்றி வந்து மறியலை முறியடிக்க முடியும்.
ஆனால் அதே சாலையில் சீருடை அணிந்துக்கொண்டு தனி மனிதனாக ஒரு காவலர் நினைத்தால் ஆயிரம் வாகனங்களை கூட நிறுத்தமுடியும். இது தான் அதிகாரம். அதிகாரம் கிடைத்தால் தான் பெரியாரிய கொள்கைகளை, கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என தாம் கூறியதை கேட்டு ஆ.ராசா திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றார் திருச்சி சிவா.
ஆ.ராசாவை மேடையில் வைத்துக் கொண்டே இந்த பழைய பிளாஷ்பேக்கை கூறி இப்போதுள்ள திமுக இளம் தலைமுறையினருக்கு இந்த தகவலை கொண்டு சேர்த்திருக்கிறார்.
இதனிடையே திமுகவில் தன்னை இணைத்துவிட்ட அரசியல் குருநாதரான திருச்சி சிவா அடைய முடியாத உயரத்தை கட்சியிலும், மத்தியிலும் எட்டிப்பிடித்தவர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்தியா முழுவதும் ஆ.ராசாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு திருச்சி சிவாவை காட்டிலும் ஆ.ராசாவின் பெயர் பட்டித்தொட்டி எங்கும் மக்களால் அறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications