"திமுகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை" பாஜகவில் இணைந்த.. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா
சென்னை: திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
மத்திய தமிழகத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் ஒருவர் என்றால் திருச்சி சிவாவை சொல்லலாம். கருணாநிதி காலத்திலும் சரி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் காலத்திலும் சரி கட்சியில் திருச்சி சிவாவுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் ஒருபோதும் குறையவில்லை.

திராவிட இயக்க கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டுள்ள திருச்சி சிவா பல முறை மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே திருச்சி சிவா சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இது அவரது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. இது தொடர்பாகப் பிரபல நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த சூர்யா சிவா, "கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கான எந்த அங்கீகாரமும், முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. கட்சித் தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன்" என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே நேற்று இரவு (மே 8) திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் அவர் பெற்றுக் கொண்டார்.
பாஜகவில் இணைந்த பின்னர், திமுக குடும்ப கட்சி என்று சாடிய சூர்யா சிவா, ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்குப் பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காகச் சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications