அப்பான்னு கூட பார்க்கலையே.. திருச்சி சிவாவை ‘அட்டாக்’ செய்த சூர்யா.. நெட்டிசன்கள் கொடுத்த பதிலடி!
சென்னை : தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய திமுக எம்.பி திருச்சி சிவா, இந்தி பாடல் பாடியதைக் குறிப்பிட்டு இதுதான் திமுக தலைவர்களின் கொள்கைச் சான்று என திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி பிரிவு பொதுச் செயலாளருமான திருச்சி சூர்யா சிவா விமர்சித்துள்ளார்.
திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பியாக இருந்தும், தனக்கு இந்தி தெரியாது எனப் பேசியுள்ளார். அந்த வீடியோவையும், திருச்சி சிவா இந்தி பாட்டு பாடிய வீடியோவையும் ஒப்பிட்டு தனது தந்தையை விமர்சித்துள்ளார் சூர்யா சிவா.
திருச்சி சிவா எம்.பி, கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத் பிரிவு உபசார விழாவில் இந்தி பாடலையும் பாடியிருந்தார். அதைக் குறிப்பிட்டு தனது தந்தையின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டை விமர்சித்த சூர்யாவுக்கு, நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தி எதிர்ப்பு - திமுக
இந்தி திணிப்பு முயற்சிகளை அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது திமுக. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பல வடிவங்களில் இந்தியை புகுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுகவைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலரும், இந்தி தெரிந்தால் தான் முன்னேறலாம் எனக் கூறப்படுவதையும், இந்தி திணிப்பையும் பல தருணங்களில் விமர்சித்துப் பேசியுள்ளனர்.

இந்தி தெரியாது- திருச்சி சிவா
அந்தவகையில், திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, "எல்லோரும் தவறாக ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள். இந்தி தெரிந்தால் தான் இந்தியாவில் உலா வர முடியும் என்று தவறாகச் சொல்கிறார்கள். நான் சற்றேறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு இன்னமும் இந்தி தெரியாது" எனப் பேசியிருந்தார்.

திருச்சி சிவா மகன் சூர்யா
இந்நிலையில், திருச்சி சிவா தனக்கு இந்தி தெரியாது எனப் பேசிய வீடியோவையும், நிகழ்வு ஒன்றில் திருச்சி சிவா இந்தி பாடலொன்றைப் பாடும் காட்சியையும் இணைத்து வீடியோவாக ட்விட்டரில் பதிவிட்ட திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி பிரிவு பொதுச் செயலாளருமான திருச்சி சூர்யா சிவா, இதுதான் திமுக தலைவர்களின் கொள்கைச் சான்று என விமர்சித்துள்ளார்.

மக்கள் ஏமாற மாட்டார்கள்
மக்கள் இனி ஏமாறத் தயாராக இல்லை, உங்கள் மொழி அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுப்படாது என திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார். தந்தை சிவாவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வரும் சூர்யா, இவ்வாறு தந்தையின் இந்தி திணிப்பு எதிர்ப்பு நிலைப்பாட்டை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி பாட்டு பாடிய திருச்சி சிவா
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி எம்.பி குலாம் நபி ஆசாத்திற்கு பிரிவு உபசார விழா கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்றபோது திமுக எம்.பி திருச்சி சிவா பிரபலமான இந்தி பாடலைப் பாடியிருந்தார். குலாம் நபி ஆசாத்தின் பிரிவு உபசார விழாவில் பல தமிழ் பாடல்களை பாடிய திருச்சி சிவா தனக்கு பிடித்தமான இந்தி பாடலையும் பாடியிருந்தார்.

பாட்டு பாட, மொழி தெரிய வேண்டியதில்லை
அந்த வீடியோவை குறிப்பிட்டே தந்தை சிவாவை விமர்சித்துள்ளார் சூர்யா. சூர்யாவின் பதிவுக்கு பலரும், இந்தி பாடலை பாட வேண்டுமென்றால், இந்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழில் பல பாடல்களைப் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோருக்கு தமிழே தெரியாது என சூர்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications