ஒப்பாரி வைத்தீங்களே.. முதல்வரின் உடல் நிலை குறித்து பேசிய பிரேமலதாவிற்கு திருச்சி சூர்யா பதிலடி
சென்னை: "ஊரில் இருப்பவர்கள் இதே போல் உங்கள் கணவரை விமர்சனம் செய்தபோது, பத்திரிகையாளர்கள் முன்பு ஒப்பாரி வைத்து புலம்பத் தெரிந்த உங்களுக்கு முதலமைச்சரை விமர்சனம் செய்யும் போது உங்களுக்கு அந்த நாகரிகம் தெரியவில்லையா?" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு, திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. பூந்தமல்லி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகப் பெரிய ஒரு கேள்வியாக இருக்கிறது. மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இது கண்டிக்கத்தக்க விஷயம். இன்று எல்லா வகையிலும், தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில், இங்கு எதுவுமே நடக்காதது போல, நல்லாட்சி நடைபெறுவது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, பொய்யாக பேசிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்கள் அனைவரும் இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம் .
அதுமட்டுமல்ல, ஒரு முதல்வர் என்பவர் எப்படி இருக்க வேண்டும். வேட்டியும் சட்டையும் அணிய வேண்டும். அதுதான் அடையாளம். ஆனால், முதல்வர் பேன்ட் சட்டை அணிந்து வருகிறார். காரணம், அவரால் நடக்க முடியவில்லை. கைகளில் உதறல் உள்ளது. முதல்வர் மிகப் பெரிய உடல்நிலை பாதிப்பில் இருக்கிறார். அது வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத்தான் பேன்ட் சட்டை அணிந்து கொண்டும், கை உதறுவதை மறைப்பதற்காக, கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்.
முதல்வர் நல்ல உடல்நிலை ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், மக்களுக்கு நன்மை செய்ய முடியும். எனவே, திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறினார். இந்த விமர்சனத்திற்கு திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனாகிய திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், எல்லையை மீறிய விமர்சனம் என்று கடுமையாக கண்டித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில், "* எல்லையை மீறிய விமர்சனம் * முதலமைச்சர் என்றால் வேட்டி சட்டை தான் அணிய வேண்டும் என்று சட்டமா? ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆக இருந்தபோது ஒரு நாள் கூட வேஷ்டி அணிந்ததில்லை. அப்போ அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?
ஊரில் இருப்பவர்கள் இதே போல் உங்கள் கணவரை விமர்சனம் செய்தபோதும் பத்திரிகையாளர்கள் முன்பு ஒப்பாரி வைத்து புலம்பத் தெரிந்த உங்களுக்கு முதலமைச்சரை விமர்சனம் செய்யும் போது உங்களுக்கு அந்த நாகரிகம் தெரியவில்லையா?
கேப்டன் உடல்நிலை குன்றி இருந்த சமயத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் அவரை விமர்சனம் செய்யக்கூடாது என்றும், உங்கள் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் சேர வந்த பொழுது கேப்டனுக்கு உடம்பு முடியாத நேரத்தில் இப்படி செய்தால் அவர் மனம் புண்படும் எனவே அவர்களை சேர்க்காதீர்கள் என்று கூறி தவிர்த்து, கேப்டன் மறைவுக்கு தமிழக அரசால் அரசாங்க மரியாதை அளித்த முதல் அமைச்சருக்கு நீங்கள் செலுத்தும் நன்றி கடனா இது? " இவ்வாறு திருச்சி சூர்யா சிவா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications