மெகா டுவிஸ்ட்.. எடப்பாடி செம குஷி! அதிமுகவுக்கு திரிணாமூல் ஆதரவாம்.. இது மம்தாவுக்கு தெரியுமா?
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாக அதன் தமிழ் மாநில தலைவர் கலைவாணன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்து உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் காய்ச்சல் நாடெங்கும் பரவி இருக்கிறது. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒருபக்கம் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி விருப்ப மனுக்களை பெறலாம் என்று முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதிமுக யாருடன் கூட்டணி என்பதற்கான விடை இன்னும் தெளிவாக கிடைக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம் அதிமுக அறிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் மீண்டும் வழங்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத் தொகுதி விண்ணப்பத்துக்கு ரூ.20,000 மற்றும் தனி தொகுதி விண்ணப்பத்திற்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து ஏராளமானோர் இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பிரிவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள அதிமுகவை சேர்ந்த நிர்மல் குமார், "கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் முன்னிலையில் திருணாமுல் காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கலைவாணன் நேரில் சந்தித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு திருணாமுல் காங்கிரஸின் தமிழ் மாநில பிரிவு முழு ஆதரவை தெரிவிப்பதாக ஆதரவு கடிதத்தை தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் வழங்கினார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து இருக்கும் அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸும் இருந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் தனியாக போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த நிலையில் அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவு திமுகவின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை ஆதரித்து இருப்பது முதலில் மம்தா பானர்ஜிக்கு தெரியுமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications