இந்திய ஆட்டோ மொபைல் துறை தப்பியது.. EV கார் பிரியர்களுக்கு குட் நியூஸ்! விஷயம் இதுதான்
சென்னை: அரிய கனிமங்கள் ஏற்றுமதி தொடர்பாக சீனா விதித்திருந்த கட்டுப்பாடுகள், இந்திய ஆட்டோமொபைல் துறையை கடுமையாக பாதித்திருந்தது. குறிப்பாக மின்சார கார் உற்பத்தியை முடக்கி போட்டது. இந்த கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய ஆட்டோமொபைல் துறை தப்பித்திருக்கிறது.
பூமிக்கு அடியில் மிகவும் குறைந்த அளவு மட்டுமே கிடைக்கும் கனிமங்களே அரிய கனிமங்கள் என்று சொல்லப்படுகிறது. நியோடிமியம், டிஸ்ப்ரோசியம், பிரசியோடிமியம், சீரியம், லாந்தனம் என 17 வகை கனிமங்கள் இந்த லிஸ்ட்டில் இருக்கின்றன.

வாகனங்கள் தயாரிப்பில், குறிப்பாக மின்சார வாகனங்கள் தயாரிப்பிலும், பாதுகாப்பு துறை ஆயுதங்கள் தயாரிப்பிலும் இந்த கனிமங்கள் மிக முக்கியமானவையாகும். உலகம் முழுக்க தேவையான கனிமங்களின் ஏற்றுமதியில் 90% வரை சீனாதான் வைத்திருக்கிறது. அமெரிக்காவுடன் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக இனி எந்த நாடுகளுக்கும் கனிமங்களை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என்று சீனா சொல்லிவிட்டது. எனவே இந்திய ஆட்டோமொபைல் துறை, உற்பத்தியில் கடுமையான சரிவை எதிர்கொண்டது.
மாருதி சுசுகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டன. இதில் சுசுகி நிறுவனம், ஸ்விப்ட் கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்துவதாக அறிவித்துவிட்டது. அதேபோல மாருதி நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்த இருந்த மின்சார காரின் உற்பத்தி தாமதமாகும் என்றும் கூறியிருந்தது. இதனால் மின்சார கார் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். சூழல் மேலும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் தென்கொரியாவின் பூஷன் நகரில், டிரம்ப்-ஜி ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. எனவே தற்போது அரிய வகை கனிமங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தப்பித்திருக்கின்றன.
ஆட்டோமொபைல் துறை மட்டும் கிடையாது, இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களும் அரிய கனிமங்களை நம்பித்தான் இருக்கின்றன. இந்தியாவுக்கு தேவையான அரிய கனிமங்கள் 80-90% வரை சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கும் சீன கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நியோடிமியம் போன்ற அரிய கனிமங்கள் கொண்டு தயாரிக்கப்படும் காந்தங்கள், ஜெட் இன்ஜின்கள், ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள், இலக்குகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புகள் மற்றும் இரவுப் பார்வை சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படி பல கனிமங்கள் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சீனாவுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான பஞ்சாயத்து ஓய்ந்திருப்பது நமக்கு நல்ல பலனை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications