கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.. துச்சமாக நினைத்தால் வீழ்வார்கள்- ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை
சென்னை: அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் என ஓபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் ஜூலை 11 இல் நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் ஓபிஎஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தர்மத்தை நம்பினேன், மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன். கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளை தொண்டர்களை நம்பினேன்.
ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!
உண்மை தர்மம்
உண்மையும் தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசிகளை நம்பினேன்.
அரசியல் கட்சி
இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது. அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் அடாவடியாக சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும் தர்மமும் தொண்டர்களும் பொதுமக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.
எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகள்
கழக நிறுவனர் எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.
எம்ஜிஆர் மந்திரம்
"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே"
என்னும் எம்ஜிஆரின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.