இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி.. தமிழகத்தை சேர்ந்த மூவர் மீது என்ஐஏ வழக்கு பதிவு
சென்னை: தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் மீது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்துள்ளது.
சையத் புகாரி, ஹசன் அலி, முகமது யூசுப்புதீன் உள்ளிட்டோர் மீது 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது என்ஐஏ. இவர்கள் மூவர் மீதும் இந்தியாவில் சதி திட்ட வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாகவும், அன்சாருல்லா என்ற தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சி செய்ததாகவும் என்ஐஏ குற்றம்சாட்டியுள்ளது.

தீவிரவாத குழுவை உருவாக்கி இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி செய்ததாகவும், பிற தீவிரவாத குழுக்களுக்கு உதவ நிதி திரட்டியதாகவும் மேற்கண்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் என்ஐஏ இன்று முழுவதும் நடத்திய சோதனையின் முடிவில் 9 மொபைல்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப்கள், 5 ஹார்ட் டிஸ்க்குகள், 6 பென் டிரைவ்கள், 2 டேப்லெட்டுகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை உள்பட 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை சுமார் 9 மணிநேரம் கழித்து மாலை நிறைவடைந்தது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. தமிழகத்திலும் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் இன்று 4 இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கேரள அமைப்பின் அலுவலகமான இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவரான சையது முகமது புகாரியின் வீட்டில் 7 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மண்ணடியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் வஹாத்தே இஸ்லாமி ஹிந்த் அலுவலகம் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தவிர நாகையில் சிக்கல், மஞ்சக்கொல்லை பகுதியில் அசன்அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பறியுள்ள என்ஐஏ மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications