காருடன் நெக் டூ நெக் சென்ற டிடிஎஃப் வாசன்.. பல்டி அடித்தபடியே பள்ளத்தில் விழுந்த சோகம்.. பரபர வீடியோ
சென்னை: காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்ற போது டிடிஎப் வாசன் விபத்துக்குள்ளானது குறித்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

இவர் பைக் ஓட்டும் சாகசங்களை பார்த்து பூரித்து போய் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார். நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
சினிமா நடிகர், நடிகைகளை போல் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் எங்கு சென்றாலும் அங்கு போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஏராளமானோர் இவரை காண ஆவலாக வருவதுண்டு. அப்படிப்பட்ட இவர் சக யூடியூப் பிரபலங்களுடன் சேர்ந்து வீடியோ போடுவார். இவருக்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர்.
கடந்த ஆண்டு வட இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது வாகனத்தில் அமர்த்தி கொண்டு பிஸியான சாலையில் 140 க்கும் மேற்பட்ட கி.மீ. வேகத்தில் வாசன் சென்றதும், காற்றின் வேகத்தால் ஜி.பி.முத்து பேசும் போது வாய் கோணல் மாணலாக சென்றதும் வீடியோவில் பதிவானது.

இத்தனை வேகத்திலும் ஜிபி முத்துவின் தலையில் ஹெல்மெட்டே இல்லை. கேட்டால், ஜிபி முத்துவின் முக பாவனைகளை ரசிப்பதற்காகவே அவருக்கு ஹெல்மெட் அணிவிக்கவில்லை என வாசன் தெரிவித்திருந்தார். இதனால் வாசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.
இந்த நிலையிலும் போலீஸை கண்டித்தும் பத்திரிகையாளர்களை கண்டித்தும் வாசன் வீடியோ போட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூரில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த வாசனை பார்க்க இளைஞர்கள் கூட்டமாக கூடினர், தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதற்கும் என் மீது கை வைத்திருந்தால் பொறுத்திருப்பேன், ஆனால் என் பசங்க (ரசிகர்கள்) போலீஸார் கை வச்சுட்டாங்க என வாசன் பேசியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் யூடியூபர் வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது வெளியானது. அதில் சர்வீஸ் சாலையில் வாசன் தனது பைக்கில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கார் சென்றுக் கொண்டிருக்கிறது. அதன் பின்னால் வந்த வாசன் தனது டூவிலரில் வீலிங் செய்கிறார். அப்போது நிலைத்தடுமாறிய பைக் பல இடங்களில் பல்டி அடித்து சாலையோரத்தில் இருந்த சுவரை தாண்டி விழுகிறது.
அது போல் டிடிஎஃப் வாசனும் பல்டி அடித்தபடியே சாலைக்கு அப்பால் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தார். உடனே அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி பதறி அடித்த படியே அந்த பள்ளத்தில் குதித்து வாசனை தூக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது ஈரக்குலையே நடுங்கிறது. ஒரு வேளை இந்த விபத்தில் முன்னால் சென்ற காரும் சிக்கி யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications