பைக்கில் 243 கி.மீ வேகம்.. இளைஞர்களை கெடுக்கும் டிடிஎப் வாசன்? குவியும் புகார்கள்! கைதுக்கு சான்ஸ்?
சென்னை: சூப்பர் பைக்கில் மணிக்கு 243 கி.மீ. வேகத்தில் இரு சக்கர வாகனத்தை இயக்கி மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்து, சாலையில் செல்வோரின் உயிருக்கு உலை வைக்கும் டிடிஎஃப் வாசனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன.
Recommended Video
கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் டிராவல் விபிலாகராவார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சாகச பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த பைக்குகள் மூலம் லடாக், நேபாளம் உள்ளிட்ட தொலைதூர பயணங்களை சென்று இளசுகளின் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் நடத்தினார்.

கட்டுக் கடங்காத கூட்டம்
இந்த விழாவுக்கு கட்டுக் கடங்காத கூட்டம் வந்துவிட்டது. ஏதோ திருவிழா என்றே பலர் கருதினர். இன்னும் சிலர் யாராவது நடிகை வந்திருக்கிறார்களா, முன்னணி நடிகரின் ஷூட்டிங்கா என நினைத்துவிட்டனர். அந்த அளவுக்கு கூட்டம். டிடிஎஃப் வாசனை சந்திக்க ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாணவேடிக்கைகள்
அது போல் வாணவேடிக்கைகளை ரசிகர்கள் செலுத்தினர். இதே போல் அண்மையில் சென்னையில் உள்ள ஒரு பிரபல விளையாட்டு பொருட்கள் இருக்கும் கடைக்கு வாசன் வருவதாக தனது பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். இதனால் அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். ஜே ஜே என இருக்கும் கூட்டத்தை கண்ட போலீஸார் அங்கு வந்து கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.

டிடிஎஃப் வாசனிடம் பேச்சுவார்த்தை
இதையடுத்து டிடிஎஃப் வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரையே ரசிகர்கள் பேச வைத்து கலைந்து போக செய்தனர். மேலும் இது போல் இனி கூட்டம் கூட வைக்கக் கூடாது என வாசனுக்கு போலீஸார் எச்சரிக்கையும் விடுத்தனர். இது ஒரு புறமிருக்க வாசன் தனது வாகனத்தில் பல சாகசங்களை செய்கிறார்.

243 கி.மீ. வேகம்
அவர் மணிக்கு 243 கி.மீ வேகத்தில் பைக்கில் பயணிக்கும் காட்சிகள் சமூகவலைதவளங்களில் வைரலாகின. இதை பார்க்கும் இளைஞர்கள் அவரை போன்றே சாகசங்களை முயற்சிப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. இதனால் அந்த இளைஞர்களுக்கும் சாலையில் செல்வோருக்கும் உயிருக்கு உலை வைக்கும் செயலாகவே உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

திரில் அனுபவங்கள்
என்னதான் "தன்னை போல் யாரும் இந்த சாகசங்களை செய்ய வேண்டாம். வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் அணிய வேண்டும். தடுக்கி விழுந்து இறந்தவர்களையும் பார்த்துள்ளோம். ஓடி போய் விழுந்து சிறுகாயமின்றி உயிர் பிழைத்தவர்களையும் பார்த்துள்ளோம். எனவே ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என சொல்ல முடியாது" என பல பேட்டிகளில் வாசன் கூறினாலும் இளங்கன்று பயமறியாது என்பதை போல் இளைஞர்கள் ஒரு வித திரில் அனுபவங்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.

கைது செய்ய கோரிக்கை
இதுகுறித்து We Dravidians எனும் பேஸ்புக் பதிவில் 243 கிமீ. வேகத்தின் புகைப்படத்துடன், இந்த நபர் இந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டும். அதிவேகமாக வாகனத்தை இயக்கி இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக திகழ்கிறார். சாலையில் செல்வோருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார். இந்திய சாலைகள் இத்தனை வேகத்தில் வாகனங்களை இயக்க இன்னும் உகந்ததில்லை. இது போன்ற பைத்தியகாரத்தனத்தால் பொதுமக்களும் அப்பாவி வாகன ஓட்டிகளும் உயிரிழப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈசிஆர் சாலை
சென்னை ஈசிஆர் சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான இளைஞர்கள் சொகுசு பைக்குகளில் ரேஸ் செல்கிறார்கள். இதனால் நிறைய பேர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ரேஸ் செல்வோரை போலீஸார் கைது செய்து வருகிறார்கள். அது போல் டிடிஎஃப் வாசனும் கைது செய்யப்பட வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

சாலை மோசம்
ஆனால் அவரது ரசிகர்களோ சாலை மோசமாக உள்ளதற்கு வாசன் பொறுப்பா, அரசுதான் சாலைகளை சரி செய்ய வேண்டும். சாலைகளில் இத்தனை கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்ற விதிகள் இல்லை. இவ்வளவு ஏன் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யக் கூட எந்த விதிகளும் இல்லை என்கிறார்கள். ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் சாலை வேகம் குறித்து அறியாமல் கமென்ட்டுகளை கூறுகிறார்கள். எக்ஸ்பிரஸ் வேயில் அதிகபட்சம் 120 கிமீ வேகத்திலும் , தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 100 கி.மீ வேகத்திலும்தான் செல்ல வேண்டும் என்பது அரசு விதியாகும். அரசு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். திரில்லிங்காக வாசன் செல்வதை போல் அனைவரும் கிளம்பினால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications