பைக்ல ஸ்லோவாதான் வந்தேன்.. மாடு குறுக்கே வந்துடுச்சி! கோர்ட்டில் "அப்பாவி" டிடிஎஃப் வாசன்
சென்னை: நான் ஒரு அப்பாவி, சாலையில் சாகசம் செய்யவில்லை, குறுக்கே கால்நடைகள் வந்ததால் பிரேக் பிடித்தேன், அதனால் வீல் தூக்கிக் கொண்டது என டிடிஎஃப் வாசன் தனது ஜாமீன் மனுவில் தெரிவித்திருந்தார்.
சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூ டியூபர் டி.டி.எப்.வாசன், செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கூறியிருப்பதாவது: தான் சாலையில் மிதமான வேகத்திலேயே வந்தேன். அப்போது கால்நடைகள் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டேன். இதனால்தான் பைக்கின் சக்கரம் தூக்கியது. ஒருவேளை தான் பிரேக் போடாமல் இருந்திருந்தால் கால்நடைகளுக்கும் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.
சிறையில் காயங்களுக்கு சிகிச்சை பெற முடியவில்லை. அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறேன். நான் ஒரு அப்பாவி. எந்த குற்றத்தையும் நான் செய்யவில்லை. நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கிஷோர்குமார் ஆஜராகி ,யூடியூபில் 45 லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள் என்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம்... ஆனால் இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள்... சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications