டிடிஎஃப் வாசன் கையில் 'பப்பி'.. மகாராஷ்டிரா காட்டில் டிரக்கிங்! இதென்னப்பா புது சிக்கல்
சென்னை: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் தனது கையில் மலைப்பாம்பு ஒன்றை ஏந்தியபடி இருந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே பல சிக்கல்களில் வாசன் மாட்டியிருக்கிறார். அதெல்லாம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், பாம்பு மூலம் மீண்டும் வாசன் பேசுபொருளாக மாறியுள்ளார்.
சோஷியல் மீடியாவில் வெளியான வீடியோவில், காரில் உள்ளே அமர்ந்திருக்கும் வாசன் கையில் பாம்பு ஒன்றை வைத்திருந்திருக்கிறார். அது மலைப்பாம்பு போல இருக்கிறது. அதற்கு ஒன்றரை வயது ஆகியுள்ளதாகவும், பெயர் 'பப்பி' என வைத்திருப்பதாகவும் வாசன் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா காட்டில் டிரக்கிங் போகும்போது இது தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார். பின்னர் காரை விட்டு இறங்கி வந்த அவர், பக்கத்தில் உள்ள ஆட்களிடம் பாம்பை காட்டியுள்ளார். பாம்புக்கு முத்தமிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பாம்பு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பாம்புகளை செல்ல பிராணிகளாக வளர்க்க அனுமதியில்லை. அப்படி மீறி வளர்ப்பவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் நடவடிக்கை பாயும். ஆனால் பல இடங்களில் பாம்புகள் இன்றும் கூட அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வருகிறது. தோல் மற்றும் மருத்துவ தேவைக்காக பாம்புகளை பலர் வளர்க்கின்றனர். தவிர, வளர்ப்பு பிராணிகளாகவும் சிலர் வளர்த்து வருகின்றனர். இவை அனைத்தும் சட்டவிரோதமானதாகும். டிடிஎஃப் வாசன் மீதும் தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டுதான் பதிவாகியுள்ளது.
ஏற்கெனவே வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் டிடிஎஃப் வாசன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம் அருகே அவர் அதிவேகத்தில் பைக் ஒட்டி வந்தபோது விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, வாசனின் பைக்கை ஏன் தீயிட்டு கொளுத்த கூடாது? அவரது சேனலை ஏன் நிரந்தரமாக மூடக்கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து அவர் நடிக்க இருந்த மஞ்சள் வீரன் படப்பிடிப்பும் தடைப்பட்டது. இதையெல்லாம் கவனித்த இயக்குநர் செல்-அம், திரைப்படத்திலிருந்து வாசனை நீக்குவதாக அறிவித்தார். தொடர் பஞ்சாயத்துகளால் சோர்ந்து போன வாசன் சில நாட்கள் பெரிய சிக்கல் எதிலும் மாட்டாமல் இருந்து வந்தார். இப்படி இருக்கையில்தான் பாம்பு வீடியோ வெளியாகி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வீடியோ தொடர்பாக வனத்துறை விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.
பாம்பு எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாரிடம் வாங்கப்பட்டது? விற்பதற்காக வைத்திருக்கிறாரா? இதன் பின்னால் உள்ள நோக்கம் என்ன? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications