குக்கரில் அவர் போட்ட ஒரு ஓட்டை.. ' TTK Prestige சேர்மன் டி.டி. ஜெகநாதன் குறித்து நெகிழ்ச்சி பதிவு
சென்னை: இந்திய சமையலறைகளில் புரட்சியை ஏற்படுத்திய டி.டி.கே நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், பிரபல தொழிலதிபருமான இந்திய கிச்சன் கிங்' டி.டி. ஜெகநாதன் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை டாக்டர் மௌத் மேட்டர்ஸ் என்ற பெயரில் நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வீட்டில் இருக்கும் குக்கர் மூடியை எடுத்துப் பாருங்கள்.அதில் ஒரு சிறு துளை இருக்கும்.அதுதான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம்.குக்கர் மூடியில் "அவர்" போட்ட அந்த சிறிய ஓட்டை தான் குக்கரை பாதுகாப்பாக மாற்றியது. அதற்கு அவர் காப்புரிமை பெறவில்லை என்று கூறியுள்ளார்.
டாக்டர் மௌத் மேட்டர்ஸ் என்ற பெயரில் நெட்டிசன் வெளியிட்ட பதிவினை அப்படியே பார்ப்போம்.. "வோல்வோ கார் நிறுவனம் தான் இன்றைக்கு நாம் நம் கார்களில் பயன்படுத்தும் Three Points Seat Belt System என்பதைக் கண்டறிந்தவர்கள்.ஆனால் அதற்கு அவர்கள் காப்புரிமையைப் பெறவில்லை. ஏன் என்று கேட்டதற்கு,"நாங்கள் காப்புரிமை பெற்றால் வேறு எந்த கார் நிறுவனமும் இப்படியான சிஸ்டமில் சீட் பெல்ட்களை டிசைன் செய்ய முடியாது.எங்கள் டிசைனை பயன்படுத்த எங்களுக்குப் பணம் தர வேண்டும்.பணத்தை விட மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.அதனால் தான் காப்புரிமையை நாங்கள் பதிவு செய்யவில்லை..." என்று பதில் தந்தார்கள்.

இதைப் போன்றே இன்னும் சொல்லப் போனால் இதை விட அற்புதமான ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையைப் பெறாமல்,பணத்தை விட மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்று மிக பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஒரு நிறுவனம் இருக்கிறது.
அதுவும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம். ஆச்சர்யமாக இருக்கிறதா?
இன்றைக்கு எளிதாக சமையல் செய்வதற்கு பெரிதும் பயன்படும் பொருள் பிரஷர் குக்கர்.உலகில் இது இல்லாத சமையல் அறைகளே இல்லை எனலாம்.பிரஷர் குக்கர் இயங்குவது அதன் உள்ளே உருவாக்கப்படும் அழுத்தத்தால் தான்.அப்படிபட்ட அந்த பிரஷர் குக்கர் அது தயாரிக்கப்பட்ட புதிதில் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் வெடித்துச் சிதறியது.இதனால் அச்சம் காரணமாக மக்களிடையே குக்கர் பயன்பாடுகள் குறையத் தொடங்கின.குக்கரை பயன்படுத்தவே மக்கள் பயந்தார்கள்.இதை எப்படி சரி செய்வது என்று இந்தியாவின் பல குக்கர் நிறுவனங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன.
பாதுகாப்பான குக்கர் என்பதை இலக்காக வைத்து மேற்படி ஆராய்ச்சியில்,தமிழ்நாட்டைச் சேர்ந்த குக்கர்கள் மற்றும் சமையல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான டிடிகே நிறுவனமும் களத்தில் இறங்கியது. அது அந்த நிறுவனம் வணிக ரீதியில் தள்ளாட்டத்தில் இருந்த காலகட்டம்.அதை சமாளிக்க சென்னை ஐஐடியில் இன்ஜினியரிங் படித்து விட்டு,பேராசிரியராகும் கனவில் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்த "அவரை" அவரது தந்தையும்,டிடிகே நிறுவனத்தின் அப்போதைய தலைவருமான நரசிம்மன் அழைத்து வந்து பிசினஸில் இறக்கி விட்டார். "அவர்" தொழிலில் நுழைந்த அந்த காலத்தில் அவர்களது டிடிகே நிறுவனம் கடுமையான நெருக்கடியில் இருந்தது.அதோடு இந்த குக்கர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது.
குக்கர் பிரச்சனையை தீர்த்தால் மட்டுமே இந்த மார்க்கெட்டில் நிற்க முடியும்.அது தான் தன் நிறுவனத்தையும் காப்பாற்றும் என்பதை அவர் மிக நன்றாகப் புரிந்து கொண்டார்.தன் பொறியியல் அறிவையும்,ஆராய்ச்சி அனுபவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து அதற்கு ஒரு தீர்வையும் கண்டுபிடித்தார்.அது தான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் (Gasket Release System). அவர் கண்டுபிடித்த அந்த கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டத்திற்கு அவர் காப்புரிமையை பெறவில்லை. ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, "நான் கண்டுபிடித்த இந்த பாதுகாப்பை காப்புரிமை செய்தால் எங்கள் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் லாபம் வரும். ஆனால் அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.எனவே வேறு எந்த நிறுவனத்தின் குக்கர் வெடித்தாலும்,அதனால் ஒட்டுமொத்த குக்கர் என்ற கருவிக்கும் கெட்ட பெயர் உண்டாகும்.அதனால் தான் செய்யவில்லை..." என்ற பதிலைத் தந்தார்.

வீட்டில் இருக்கும் குக்கர் மூடியை எடுத்துப் பாருங்கள்.அதில் ஒரு சிறு துளை இருக்கும்.அதுதான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம்.குக்கர் மூடியில் "அவர்" போட்ட அந்த சிறிய ஓட்டை தான் குக்கரை பாதுகாப்பாக மாற்றியதுடன்,டிடிகே நிறுவனத்தையும் காப்பாற்றித் தந்தது... அந்த "அவர்" தான் டி.டி.கே.ஜெகந்நாதன்...
இன்றைக்கும் கோடிக்கணக்கான வீடுகளில் பாதுகாப்பான குக்கர் சமையல் என்பதற்கு வித்திட்ட அந்த மாபெரும் மனிதரான .டி.கே.ஜெகந்நாதன் தன் 84 வது வயதில் பெங்களூருவில் காலமானார். அவருக்கு குக்கர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வீடுகளுள் ஒருவர் என்ற கடமையில், குக்கரை பாதுகாப்பான ஒன்றாக மாற்றித் தந்த நன்றியில், என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்....." இவ்வாறு நெட்டிசன் அந்த பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications