அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை? 11 பேர் உயிரிழப்பு - தினகரன் 'அதிர்ச்சி' ட்வீட்
சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் பலியானதாக வெளியாகும் செய்தி சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு மிக மோசமாக உள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. தலைநகர் டெல்லியில் சிலிண்டர் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்தது. இதனால், பலரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் இந்த பாதிப்பு குறைவு என்று கூறப்பட்டாலும், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக பல இடங்களில், படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதை காண முடிகிறது.
உயிருக்கு போராடிய 22 பேர்.. சோனு சூட்டிற்கு பறந்த எஸ்ஓஎஸ் கால்.. ஆக்சிஜனோடு வந்த ரட்சகன்.. உருக்கம்
அடுத்தடுத்து இறப்பு
இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்ட போதும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது.
ஆட்சியர் ஆய்வு
சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.
அதிர்ச்சி, வேதனை
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன.
இனியாவது உணரணும்
இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழக அரசு நிர்வாகம் இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.