பழனிசாமியை எப்படி முதல்வராக ஏற்போம்? 'அகங்கார ஆணவம் பிடித்த' நயினார்! டிடிவி தினகரன் விளாசல்
மானாமதுரை: என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக வெளியேற காரணம் நயினார் நாகேந்திரன்தான் என்றும் துரோகம் இழைத்த பழனிசாமியை நாங்கள் எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியும் என அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்தவர். அப்படியிருக்கும் போது அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?

துரோகம் புரிந்த எடப்பாடி பழனிசாமி எங்களை சந்திக்கவே தயங்கும் போது எப்படி கூட்டணிக்கு வருவார்? துரோகத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதுதானே அமமுக கட்சி. பிறகு எங்களை தற்கொலை செய்துக் கொண்டு இன்னொருத்தரை, துரோகம் இழைத்தவரை நாங்கள் எப்படி முதல்வராக்குவோம்?
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே என்டிஏ கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியில் எங்களை அப்போது இணைத்தவர் அண்ணாமலை. இன்று ஏதோ டிடிவி தினகரனுடனும் ஓபிஎஸ்ஸுடனும் பேசத் தயார் என நயினார் நாகேந்திரன் சொல்கிறார்.
அவர் அரசியலுக்காக புருடா விடுகிறார். பழனிசாமி போதும் என நயினார் கருதுகிறார். அவர் அகங்காரத்துடன் ஆணவத்துடன் செயல்பட்டதால்தான் நாங்கள் வெளியேறினோம். ஓபிஎஸ்ஸுக்காக நான் ஏன் பேசுகிறேன் என என்னை கேள்வி எழுப்புகிறார்.
இதிலிருந்தே அவர் மனநிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓபிஎஸ்ஸுக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவது? பிரதமரை சந்திக்க வேண்டும் என நயினாரை, ஓபிஎஸ் போனில் தொடர்பு கொண்டார், போனை எடுக்கவில்லை. இதனால் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதற்கும் பதில் அளிக்கவில்லை. இவ்வளவையும் செய்துவிட்டு பின்னர் பின்னர் பொய் பேசினால் என்ன அர்த்தம்?
அதனால்தான் ஓபிஎஸ் அந்த குறுஞ்செய்தி ஆதாரத்தை வெளியிட்டார். அவர் சும்மாவே வெளியிடும் நபர் அல்ல. எனக்காக ஓபிஎஸ் தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தார். அவர் மகன் எம்பியாக இருந்த தொகுதி. அதை விட்டுக் கொடுத்துவிட்டு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டார்.
ஓபிஎஸ்ஸுக்கு தெரியும், நான் ஜெயலலிதா இருக்கும் போது இந்த தொகுதியில் எனக்கு எத்தனை செல்வாக்கு இருந்தது என்பது! அதனால் அவரது தொகுதியை எனக்கு விட்டுக் கொடுத்தார்.
நானும் ஓபிஎஸ்ஸும் ஒன்றாக பயணிக்க போகிறோம் என நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். பிறகு அவருக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்? இதனால் நாங்கள் என்டிஏ கூட்டணியில் தொடர்வதை நயினார் விரும்பவில்லை. எங்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
அகங்காரத்தில் பேயாட்டம் போடுகிறார் பழனிசாமி. தமிழ்நாட்டில் இன்றைய மனநிலை நயினாருக்கு தெரியவில்லை. நயினாருக்கு செலக்டிவ் அம்னீஷியா. அதிமுகவில் துரோகம் இழைத்த பழனிசாமி தவிர வேறு யார் மீதும் எங்களுக்கு வருத்தம் இல்லை. இரட்டை இலையை சிதைத்துவிட்டார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications