டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் தம்பி பங்கேற்பு..! அதிமுகவில் அடுத்த அதிர்வலை!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ . பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா பங்கேற்றுள்ளார்.
சசிகலா அதிமுகவில் வருவதற்கு மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டும் வகையில் சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்தார். இது அதிமுகவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வடக்கு மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள் பன்னீர்செல்வம் பேட்டியை ரசிக்கவில்லை . சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆகியோர் பன்னீர்செல்வம் கருத்தை தீவிரமாக எதிர்த்து பேட்டியளித்தனர்.

பேட்டியளித்த ஓபிஎஸ்
அதேநேரம் அதிமுகவில் மற்றொரு பிரிவு, அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்றுள்ளனர். ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டி எங்கே வைத்து கொடுக்கப்பட்டது என்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி அவரது சிலைக்கு அணிவிப்பதற்காக அதிமுக கட்சி சார்பில் வழங்கிய சுமார் 13 அரை கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கரில் இருந்து எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பன்னீர் செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் . பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு தங்க கவசம் எடுத்து பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் வழங்கினார். இதன் பிறகு அளித்த பேட்டியின் போதுதான் சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு கருத்தை முன்வைத்தார் பன்னீர்செல்வம் . ஜாதிய ரீதியாக சசிகலாவுடன் பன்னீர்செல்வம் நெருக்கம் காட்டுகிறார் என்ற சிக்னலை இந்த பேட்டி வழங்குவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.

தென் மாவட்டங்கள் நிலவரம்
தென் மாவட்டங்களில் பரவலாக உள்ள முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக இதுவரை அதிமுகவுக்கு கிடைத்து வந்தன. ஆனால் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டதாலும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட்டாலும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுக அதிக தொகுதிகளை இழக்க நேரிட்டது . பன்னீர்செல்வத்தின் கோட்டையான தேனி மாவட்டத்திலும் வருங்காலங்களில் இது கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்களும் இந்த பயம் இருக்கிறது. எனவே சசிகலாவுடன் இணக்கமாக செல்ல அவர்கள் நினைக்கிறார்கள். முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிடம் இருந்து வேறு கட்சிக்கு சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்கிறது.

சசிகலாவுடன் பேசிக் கொண்டிருந்த டிடிவி தினகரன்
இந்த நிலையில்தான், தஞ்சை அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில் இன்று டிடிவி தினகரன் மகளுக்கும் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இதில் சசிகலா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். திருமணத்துக்கு வந்திருந்த, தனது சித்தி சசிகலாவின் கைகளை பிடித்தபடி தினகரன் பேசிக்கொண்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை பார்க்க முடிகிறது.

ஓபிஎஸ் சகோதரர் பங்கேற்பு
தனித்து போட்டியிட்டு அதிமுக தோல்விக்கு முக்கியமான காரணமாக மாறியவர் டிடிவி தினகரன். எனவே அதிமுகவின் முக்கிய புள்ளிகள் யாரும், தினகரன் இல்ல திருமண விழாவிற்கு செல்லவில்லை . ஆனால் பன்னீர்செல்வம் தம்பி, ஓ.ராஜா இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரும் தினகரனும் கையெடுத்து கும்பிட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. சொந்த பழக்கத்தின் அடிப்படையிலோ அல்லது ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலோ ராஜா இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்பட்டாலும், அதை அப்படி மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அதிமுகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தான் ராஜா. அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டத்தில் ஆவின் நிர்வாக குழு தலைவராக ராஜா பதவி வகித்தார்.

சலசலப்புகள்
இதுபோன்ற நிலையில் பன்னீர்செல்வம் சகோதரராக தினகரன் இல்லத் திருமண விழாவில் ராஜா பங்கேற்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்க கூடிய பன்னீர்செல்வத்தின் சகோதரர், அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதும் சில தினங்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததும், இணைத்து பார்க்கப்பட்டு அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பு பேசு பொருளாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications