2021-ல் அதிமுக+ பாஜக கூட்டணி தோற்கும்னு அமித்ஷாகிட்ட எழுதி கொடுத்தேன்! டிடிவி தினகரன் ஷாக் தகவல்
சென்னை: 2021-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் தோற்றுப்போய் விடுவோமென அமித்ஷாவிற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன். நான் பழனிசாமியுடன் சேர வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தலுக்கு பிறகே நடத்த வேண்டும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப் போட வேண்டும்.

சாமானிய மக்களுக்கு "சார்" படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். என்றைக்கும் டிடிவி தினகரனாகிய நான் , எடப்பாடி பழனிசாமிக்கு சிம்மசொப்பனம்தான். துரோகத்தை வீழ்த்தாமல் யார் தடுத்தாலும் நான் ஓய மாட்டேன்.
பன்னீர் செல்வம் துரோகம் செய்தார் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் துரோகம் செய்தார்கள் என்பது உலகுக்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று இல்லாமல் கட்சியின் பொதுச் செயலாளராக தான் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.
எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. விஜய்யின் வருகையால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும். மேலும் தேர்தலில் திமுக கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் இடையே போட்டி.
தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக நான் சொல்லவில்லை. யதார்த்தமாக, சாதாரண குடிமகனாக பதில் சொல்கிறேன். விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டி நிலவும்.
கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னை அணுகினார்கள். ஆனால் நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. வெற்றிக் கட்சியுடன்தான் எனது கூட்டணி.
2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் தோற்று போய் விடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன். அப்போது என்னை சந்திக்க கிஷன்ரெட்டியிடம் கடிதம் கொடுத்தேன்.
எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் ஜா அணி, ஜெ அணி என பிரிந்து நின்ற போது எதிர்த்து நின்றவர்களை பிற்காலத்தில் அரவணைத்துக் கொண்டு எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வர ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
ஓ.பன்னீர் செல்வம் அப்போது ஜானகி அணியில் இருந்தவர். அவரை சேர்த்துக் கொண்டு முதல்வர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. ஆர்.எம்.வீரப்பன், பா. வளர்மதி போன்றோர் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியவர்கள்தான். ஒரு கட்டத்தில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டார்.
அதற்காக நான் இணைய விரும்புகிறேன் என நினைத்துவிட வேண்டாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முறைப்படி கூட்டணி குறித்த அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன். புதிய மாற்றங்கள் வரும். எடப்பாடி பழனிசாமியை தவிர அந்த கட்சியில் இருக்கும் வேறு யார் மீதும் எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. எங்களால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications