ஓபிஎஸ் நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்துருச்சாம்.. எடப்பாடி உடன் சேர்ந்துகொண்டு தினகரன் அழைப்பு!
சென்னை: "அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. கூட்டணியில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது." என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, டிடிவி தினகரனின் அமமுக, தமாக, அன்புமணி தலைமையிலான பாமக, ஜான்பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் கைகோர்த்துள்ளனர். மேலும், கூட்டணிக்கு தேமுதிகவை கொண்டு வர அந்தக் கட்சியுடனும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசியாகத் திகழ்ந்தவர், ஜெயலலிதாவால் முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்று அதிமுக தொண்டர்களால் பார்க்கப்பட்டவரின் அரசியல் பயணம் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அடியோடு மாறிவிட்டது. தர்மயுத்தம் நடத்தி பின்னர், எடப்பாடி பழனிசாமியோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு அமைதியானார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு, அதிமுக-வையும் எடப்பாடி பழனிசாமியிடம் பறிகொடுத்த ஓபிஎஸ் தனித்துக் களமிறங்கினார். தினகரன், சசிகலா ஆகியோரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தார் ஓபிஎஸ். இப்போது, தனது ஆதரவாளர்களையும் இழந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். தற்போது, டிடிவி தினகரனே எடப்பாடி பழனிசாமியுடனான கூட்டணியில் இணைந்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து மனஸ்தாபங்களை மறந்து தேர்தலில் பணியாற்றுவோம் என்று கூறிவிட்டார் தினகரன். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை அவர்கள் இணைத்துக்கொள்ளவில்லை. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுக-விலும், ஜேசிடி பிரபாகர் தவெகவிலும், தர்மர் எம்.பி அதிமுகவிலும் ஐக்கியமான நிலையில் தற்போது தனித்து விடப்பட்டு உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெறுவாரா? அல்லது செங்கோட்டையன் அழைப்பை ஏற்று தவெக-வுடன் இணைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்காக தினகரன் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் பேசி போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவாரா? அப்படி வாங்கித் தந்தால் ஓ.பன்னீர்செல்வம் என்ன சின்னத்தில் போட்டியிடுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "அதிமுக-வால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் இந்த இயக்கத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட ஓரணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அவரும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்." என அழைப்பு விடுத்துள்ளார்.
அம்மாவின் ஆட்சி மலர்வதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வோம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டரான ஓபிஎஸ் எங்கள் கூட்டணிக்கு வருவார். அவர் மட்டும் தர்ம யுத்தத்தை தொடங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில் மீண்டும் முதல்வராக வந்திருப்பார். அதிமுக-வால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட எங்கள் கூட்டணியில் அவர் இணைய வேண்டும். இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் வர உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications