உதயநிதி சொன்னது உண்மை தான்.. எடப்பாடி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது! டிடிவி தினகரன் ஒரே போடு!
மதுரை: எடப்பாடி பழனிசாமி தான் தங்களது வெற்றியின் ரகசியம் என உதயநிதி ஸ்டாலின் சொன்னதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். உதயநிதி தான் உண்மையை சொல்லியிருக்கிறார். துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அமமுக அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் உழைக்கும் இயக்கும். தேவர் பெயர் மதுரை விமான நிலையத்துக்கு சூட்டப்பட வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்னர் வாக்குறுதியாக சொல்லியுள்ளேன்.
இந்த நேரத்தில் நயவஞ்சகமாக எடப்பாடி பழனிசாமி வன்னியர் உள் ஒதுக்கீடு அரசியல் காரணமாக தென் தமிழகத்தில் சமூக அமைதி கெட்டது. அதனடிப்படையில் நான் சொன்ன கருத்தை தவறாக பிரிந்து கொண்டு சிலர் தூண்டப்பட்டு செயல்பட்டுள்ளார்கள்.

டிடிவி தினகரன்
தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்டு சமரசம் இன்றி தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி இது பற்றி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்ற வேண்டும். அதை வைத்து எடப்பாடி அரசியல் செய்கிறார் என்று தான் சொன்னேன். நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட கோபமில்லை. ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டது பிடிக்கவில்லை. அவர் நல்ல நண்பராக அவர் என்றும் என்னை சந்திக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி
பழனிசாமி தான் தங்களது வெற்றியின் ரகசியம் என உதயநிதி சொன்னதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். உதயநிதி உண்மையை சொல்லியிருக்கிறார். துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது. மற்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட பாஜக தமிழ்நாட்டில் எது தேவையென்பதை உணர வேண்டும். தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு பழனிசாமி என்ற ஒற்றை மனிதருக்கு காவடி தூக்குபவர்கள், அம்மாவுக்கு கோவில் கட்டியவர்களை தான் அம்மா ஆன்மா சும்மா விடாது.
செங்கோட்டையன்
செங்கோட்டையனை தனிப்பட்ட வேறொரு காரணத்துக்காகவே ஜெயலலிதா நீக்கியிருந்தார். அதற்கு அரசியல் காரணம் அல்ல. செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். எங்கள் வழி தனி வழி. நாங்கள் அமைகின்ற கூட்டணி தான் ஆட்சியில் அமர போகிற கூட்டணி.
உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி தலைவரும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார். செங்கல்பட்டில் பேசிய அவர்," அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் நிலை ஏற்படும். அதிமுக ஐசியூவில் அனுமதிக்கப்படும் போது காப்பாற்றும் மருத்துவராக தமிழ்நாடு முதல்வர் வருவார் என தான் கூறியிருந்தேன். அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போது தான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும். அ.தி.மு.க.வினர் இதை ஒத்துக் கொள்வார்களா என தெரியாது. ஆனால் நான் முன் மொழிகிறேன். நீங்கள் தான் நிரந்தர பொதுச்செயலாளர்." என பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications