நீங்கள் வர வேண்டும் என்று தான் ஆசை.. நல்விருந்து ஒன்றில் நாம் சந்திப்போம் -டிடிவி தினகரன் கடிதம்..!
சென்னை: தனது மகள் திருமணத்தில் அமமுகவினர் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் தனக்கிருந்தாலும், கொரோனா காரணமாக அனைவரையும் அழைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வரும் 16-ம் தேதி திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினிக்கும், தஞ்சை மாவட்டம் பூண்டி துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.

இதற்கான அழைப்பிதழை அமமுகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே தினகரன் வழங்கியுள்ளார். நகர, ஒன்றிய, பகுதி, கிளை என்கிற வகையில் எந்த நிர்வாகிக்கும் அவர் அழைப்பிதழ் அனுப்பவில்லை.
அதேநேரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தனது மகள் திருமண அழைப்பிதழை தினகரன் கொடுத்திருக்கிறார்.
இதனால் அமமுக தொண்டர்களும், அடிமட்ட நிர்வாகிகளும் சோர்வடைந்து விடுவார்களோ எனக் கருதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் விவரம் பின்வருமாறு;
''நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு... என்று தொடங்கும் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;
அரசியல் இயக்கம் என்பதைத் தாண்டி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகள் என்ற பந்தத்தில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாசப்பிணைப்பு நமக்குள் எப்போதும் இருக்கிறது. என் மீது நீங்கள் காட்டுகிற அளவிடமுடியாத அன்பும், உங்கள் மீது எனக்குள்ள அசைக்க முடியாத பற்றுமே அதற்கான சாட்சி.
அத்தகைய கழகம் என்னும் நம்முடைய அன்புக்குடும்பத்தின் மகிழ்ச்சி விழாவாக, என் அன்பு மகள் ஜெயஹரிணி அவர்களுக்கும், பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் திருநிறைச்செல்வன்.K. ராமநாத துளசி அய்யா வாண்டையார் அவர்களுக்கும் வருகிற 16.09.2021 வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
தாங்கள் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து திருமணத்தை நடத்திட வேண்டும் என்பதே எனது பெரும் விருப்பம். எனினும் கொரோனா பேரிடர் பாதிப்பு இன்னும் முழுமையாக விலகாத நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால், தங்கள் அனைவரின் முன்னிலையில் திருமண விழாவை நடத்திட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அதனால், இல்லறம் ஏற்கும் மணமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட தங்களின் மனப்பூர்வமான அன்பையும், இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தந்திட வேண்டுகிறேன். இறையருளால் கொரோனா சூழல் மாறியவுடன் நல்விருந்து ஒன்றில் நாம் சந்திப்போம்.''
இந்த கடிதத்தின் மூலம் அமமுக தொண்டர்களுக்கு விரைவில் தனியாக விருந்து வைக்கவுள்ளதை அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications