லோக்சபா தேர்தல் வியூகம்..!! வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே
சென்னை:லோக்சபா தேர்தலில் போட்டியிட அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 11 தொகுதிகளை தேர்ந்தெடுத்து, தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். இது தொடர்பாக... அந்த 11 தொகுதிகளின் சாதக, பாதகங்களையும் அவர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் கணக்கீடு மத்தியில் உள்ள தேசிய கட்சிகளையும்.. மாநிலத்தில் உள்ள பிராந்திய கட்சிகளையும் தீவிரமாக களப்பணியாற்ற வைத்துள்ளது.தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வருகின்றன.
மாநில கட்சிகளும் மாறி வரும் அரசியல் தட்பவெப்பநிலைகளுக்கு ஏற்ப கூட்டணிகளை மாற்றி மாற்றி அமைத்து வருகின்றன. எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக அல்லது திமுக இவற்றில் ஏதோ ஒரு கட்சியுடன் கை கோர்த்து தேர்தலை சந்திக்கிறது.
தேசிய கட்சிகள் கூட்டணி
அதன் ஒரு முகமாக... தமிழகத்தில் திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இணைந்துவிட்டது காங்கிரஸ் கட்சி. பாஜகவோ... அதிமுகவை கூட்டணி வலைக்குள் கொண்டு வர பகீர பிரயத்தனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழகம் வரும் மோடி
பிரதமர் மோடியும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார். அடுத்து வரக்கூடிய சில நாட்களில் அவர் மதுரையில் தமது பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளார். அவருக்கு கருப்புக்கொடி காட்ட வைகோவும் தயாராகி விட்டார்.
தனித்தே போட்டி
இந்த சூழ்நிலையில் லோக்சபா தேர்தலில் எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்ட அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் கணக்கீடுகளை மையப்படுத்தி... தமது அடுத்தக்கட்ட அரசியல் பணிகளை துவக்கி வைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சர்வேயில் கிடைத்த விவரங்கள்
அதற்காக அவர் ஒரு சர்வே ஒன்றை நடத்தியிருப்பதாகவும்... அதன் அடிப்படையில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதாகவும் தெரிகிறது. தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ள அமமுக, அனைத்து தொகுதிகளிலும் களம் காணுவதை விட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற டி.டி.வி. தினகரன் முடிவு செய்துள்ளார்.
11 தொகுதிகள் சாதகம்
அதற்காக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் சர்வே நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சர்வேயில் 11 தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகவும், 5 தொகுதிகள் 2-ம் இடத்தை பெறும் தொகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
செல்வாக்கு அதிகரிப்பு
பெரும்பாலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சர்வேயில், வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஆரணி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கண்ட தொகுதிகளில் அமமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளாக அக்கட்சி கருதுகிறது.
அமமுகவுக்கு 2ம் இடம்?
அதுதவிர சேலம், திருப்பூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகிய தொகுதிகளும் தனியார் நிறுவனத்தின் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை அமமுக பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே அந்த 11 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.