பாஜக கூட்டணி தற்கொலைக்குச் சமம் - சொன்னது யார் தெரியுமா? டிடிவி அடித்த பல்டிகள்!
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமமானது என்று பேசி இருந்த டிடிவி தினகரன், இன்று அப்படியே பல்டி அடித்து மாற்றிப் பேசி வருகிறார்.
பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்தது ஏன்? என்று பல புதிய விளக்கங்களை அளித்து வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

'நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டுக்குத் தேவையான புதிய திட்டங்களைக் கொண்டுவருவதற்காகவும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி உள்ளோம்' என்று அவர் சில தினங்கள் முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
ஆனால், இதே தினகரன், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்த போது, 'அது தற்கொலைக்குச் சமம்' என்று சொல்லி இருந்தார்.
'அம்மாவின் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். இது அம்மாவுக்குச் செய்த துரோகம்' என்றும் சொல்லி இருந்தார்.
இன்றைக்கு அப்படியே தலைகீழாகப் பல்டி அடித்துள்ளார் டிடிவி தினகரன். அவர் பாஜகவைப் பற்றி வைத்த விமர்சனங்கள் என்ன? பாஜகவைப் பற்றி அவர் என்னென்ன சொன்னார்? ஒரு ரீவைண்ட் அடித்தோம்.
தேதி வாரியாக வருடம் வாரியாக அப்படியே அவரது விமர்சனங்களைத் தொகுத்து அளித்துள்ளோம்.

08.10.2018
"பாஜக தமிழ்நாட்டில் நோட்டோ உடன் போட்டிப்போட்டுக் கொண்டுள்ள கட்சி. அந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைப்போமா? நாங்கள் அந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதற்காகப் போவோமா? மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கலாம். பெரிய கட்சியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் அந்தக் கட்சிக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? அதுவே நோட்டாவுடன் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளது.
8.11. 2018
8.11. 2018 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று அளித்த பேட்டியில் கூட, 'பாஜகவுடன் திமுகவுடன் கூட்டணி என்பது இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணியைவிட்டு வெளியே வந்தால் நாங்கள் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்' என்று பேசி இருந்தார்.

மத்திய அரசுக்கு எதிராக ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது 16.03. 2018 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், 'இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் பாஜகவை எதிர்க்கிறது என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கும் என்றே அர்த்தம். ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கை பெற வேண்டும்.
அதைவிட்டு விட்டு, அனைவரின் கையை முறுக்கி, காலை உடைத்து, மிரட்டி, உருட்டி கட்சிக்குள் இழுப்பது எல்லாம் எத்தனை நாளைக்கு எடுபடும். இப்படியான குறுக்குவழிகள் எல்லாம் நிலைக்காது. தமிழாட்டில் பாஜகவின் வேலை கள் எடுபடாது' என்று கூறியிருந்தார்.
15.02. 2019
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கச்சேரிமேடு பகுதியில் பேசிய போது, 'பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவுடன் என்றுமே கூட்டணி கிடையாது என்று அறிவித்தவர் ஜெயலலிதா. அந்தக் கட்சியுடன் கூட்டணி பேரம் பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி' என்று பாஜகவை ஒரு எதிரியாகச் சித்தரித்துப் பேசி இருந்தார்.

10.04.2019
பாஜகவில் உள்ள கருப்பு முருகானந்தம் என்பவர் தன்னை உதவியாளர் மூலம் தொடர்பு கொண்டதாகவும் ராமநாதபுரத்தில் செல்வாக்கு இல்லாத ஒரு சிறுபான்மை வேட்பாளரைப் போடச் சொன்னதாகவும், அதேபோல் பொன் ராதாகிருஷ்ணனும் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் தான் இதற்கு எல்லாம் அடிபணியவில்லை என்று டிடிவி தினகரன் 10.04. 2019 கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் அதே பேட்டியில், அதிமுக தங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் பாஜகவுக்கு அடிபணியமாட்டோம். எடப்பாடி பழனிசாமி என்றால் வளைந்து கொடுப்பார். ஆகவே பாஜகதான் தங்களிடம் அதிமுக வராமல் தடுத்துவிட்டது என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
19.10.2019
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது தொடர்பாக 19.10.2019 அன்று சேலத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'அதிமுக தொண்டர்கள் அனைவரும் தெய்வமாகக் கருதுகின்ற ஜெயலலிதாவின் நினைவிடத்தையே கட்டக் கூட்டது. அவர் ஒரு குற்றவாளி. அவர் உயிருடன் இருந்தால் சிறைச்சாலையிலிருந்திருப்பார்.

ஆகவே அவருக்கு நினைவிடம் கட்டக் கூடாது என்று அறிக்கை கொடுத்த பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமியும் ஒ பன்னீர்செல்வமும் கூட்டணி வைத்துள்ளார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது தற்கொலைக்குச் சமமானது என்பதுதான் எனது கருத்து' என்று சொல்லி இருந்தார்.
2.10. 2023
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது பற்றி அக்டோபர் 2, 2023 அன்று பேசிய டிடிவி தினகரன், 'இதுவரை மத்தியில் ஆளும் பாஜக உதவியால்தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியே காப்பாற்றப்பட்டு வந்தது. இந்த விசயம் எல்லோருக்கும் தெரியும்.
பாஜக மட்டும் எடப்பாடியைக் கைவிட்டு விட்டால், வருங்காலத்தில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னமே இல்லாமல் போய்விடும். இரட்டை இலை இல்லை என்றால், அதிமுக நெல்லிக்காய் மூட்டையைப் போல் சிதறிவிடும்.

எடப்பாடி பழனிசாமி எப்போதும் உதவி செய்தவர்களுக்கே துரோகம் செய்வார். அப்படித்தான் அவரது கட்சியைக் காப்பாற்றி, ஆட்சியைக் காப்பாற்றித் தந்த பாஜகவுக்கு அவர் துரோகம் செய்துள்ளார். அதற்கான தண்டனையை அவர் அனுபவிப்பார்' என்று சொல்லி இருந்தார்.
20.10.2023 அன்று கோவை விமானநிலையத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? அப்படி ஒரு தகவல் வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உங்கள் ஊகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று சொல்லி இருந்தார்.
12.03.2024
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி பிரதிநிதி கிஷன் ரெட்டியும் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்கள். அவர்களிடம் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக உறுதிமொழி அளித்துள்ளேன்.

13.03.2024
தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவுடன் போட்டிப்போடும் கட்சி என்று சொன்ன நீங்கள், இப்போது அதே கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன்?
நான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான ஹைட்ரோகார்பன் மீதேன் திட்டம். ஸ்டெர்லைட் ஆலை திட்டம் போன்ற திட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மீது திணித்தால், அந்தக் கட்சியுடன் வாழ்நாள் முழுக்க கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தேன்.
இப்போது மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டமாகட்டும், ஸ்டெர்லைட் திட்டமாகட்டும் இதில் எதிலும் அழுத்தம் கொடுக்கவில்லை. நீதிமன்றம் சுதந்திரமாகத் தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆகவே எந்தப் பயமும் இல்லை.












Click it and Unblock the Notifications