மைத்துனரின் மாமனாருக்கு வெயிட் பதவி... டிடிவி தினகரன் அறிவிப்பு
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக பண்ணைவயல் பாஸ்கரனை புதிதாக நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனின் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷின் மாமனார் தான் இந்த பண்ணைவயல் பாஸ்கரன். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த இவர் தனது மருமகன் வெங்கடேஷ் மூலம் இந்தப் பதவியை பெற்றதாக கூறப்படுகிறது. கட்சியில் தன்னை தவிர குடும்ப உறுப்பினர்களோ, நெருங்கிய உறவினர்களோ யாரையும் அனுமதிக்காத தினகரன் முதல்முறையாக உறவினர் ஒருவருக்கு பொறுப்பு கொடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் பண்ணைவயல் பாஸ்கரனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அவரது அண்ணன் தம்பிகள் யாரும் அமமுகவிலும் இல்லை தினகரனுக்கு ஆதரவும் இல்லை. முதலில் இவருக்கு பொறுப்பு வழங்குவது சரியாக இருக்காது எனக் கருதிய தினகரன், வெங்கடேஷ் கேட்டுக்கொண்டதால் வேறுவழியின்றி அமைப்புச்செயலாளர் ஆக்கினாராம்.
இதனிடையே பண்ணைவயல் பாஸ்கரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்ட அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம். நிர்வாகிகளை அறவே மதிக்கமாட்டார் பாஸ்கரன், இவருக்கு இனியும் எங்களால் சேவகம் செய்ய முடியாது என கூறுகின்றனர் பட்டுக்கோட்டை பகுதி அமமுக நிர்வாகிகள்.
மேலும், அமமுகவில் ஏற்கனவே பல அமைப்புச்செயலாளர்கள் உள்ள நிலையில் இவர் மட்டும் கட்சிக்கு என்ன செய்துவிடப்போகிறார் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் தன்னை விட்டு பிரிந்து சென்ற உறவுகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் முதல்முயற்சியாக பாஸ்கரனுக்கு வெயிட் பதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications