குடியரசு தினத்தில் குண்டு போட்ட கர்நாடக ஆளுநர்.. தமிழ்நாட்டை பாலைவனமாக்க சதி - டிடிவி காட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த இறுதி உத்தரவுற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டி வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையே காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய இறுதி உத்தரவை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்ட தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தும் என கர்நாடக மாநில ஆளுநர் அவர்களின் குடியரசு தின உரையில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது, “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில ஆளுநர் அவர்களின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும். காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications