கிளாம்பாக்கம் பஸ் ஸ்டான்டில் மெத்தம்பட்டமைன் போதை பொருள்! முழுசா ஒழிப்பது எப்போது? டிடிவி தினகரன்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் - இளைய சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பது எப்போது? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மூலமாக இலங்கைக்கு கடத்தவிருந்த 6 கிலோ எடை கொண்ட மெத்தம்பட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக செங்குன்றம் அருகே போதைப் பொருட்களை பதுக்கி வைப்பதற்காகவே தனி குடோன் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தாரளமாகக் கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் என அனைத்து தரப்பினரும் அடிமையாகி வருவது அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைச் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சர்வசாதாரணமாக பேருந்துகள் மூலமாகவே கடத்தப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி, இந்த கடத்தல் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான், இப்ராஹிம் மற்றும் மன்சூர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு நாடுகளிடம் பெறப்பட்ட போதைப்பொருளை ராமநாதபுரம் எடுத்து சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications