தினகரன் தொட்டதெல்லாம் தோல்விதான்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி.. இனியும் இணைந்திருப்பார்களா?
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியலில் டிடிவி தினகரன் ஜான் ஏறினால் முழம் வழுக்கிக் கொண்டு உள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரால் கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட தினகரனை, மீண்டும் கட்சியில் சேர்ந்தார் சித்தி, சசிகலா.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறை சென்றதும், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அவசரமாக களமிறங்கினார் தினகரன். அதுதான் சமீபத்தில் அவர் செய்த மிகப் பெரிய வரலாற்றுத் தவறாக மாறிவிட்டது.

முதல்வர் ஆசைகள்
சசிகலா முதல்வராக முயற்சித்தபோதுதான், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி அவர் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிமுக பொறுப்பை தினகரனுக்கு கொடுத்துவிட்டு சிறை சென்றார் சசிகலா. ஆனால் தினகரனுக்கும் முதல்வர் ஆகும் ஆசை வந்ததாக கூறப்படுகிறது. எனவேதான் அவசரமாக ஆர்கேநகர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தாராம்.

சுதாரித்த எடப்பாடி-ஓபிஎஸ்
சசிகலா முதல்வரானால், ஓ பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் ஆரம்பித்து விடும் என்ற அச்சம் இருந்தது போலவே தினகரன் முதல்வரானால், எடப்பாடி அணியும் பலவீனமடையும் என்ற எண்ணம் இந்த தரப்புக்கும் இருந்தது. அந்த நேரத்தில்தான் தினகரனுக்கு முதல் அடி விழுந்தது. பணப்பட்டுவாடா புகார்களால், ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிப்போனது. சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு சம்மதித்தார். இதனால் தனிமரம் ஆனார் தினகரன்.

பேராசை பெரு நஷ்டம்
முதல்வர் ஆசை காரணமாக மொத்தமும் பறிபோனது தினகரனுக்கு. ஒருவேளை அவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு இஷ்டப்படி ஆட்சியை வழி நடத்தி இருக்க முடியும். ஆனால் விதி வலியது. அது தனது வேலையை காட்டியது. ஒவ்வொரு பருக்கை சோறிலும், அதற்கு உரியவரின் பெயர் எழுதப்பட்டிருப்பதாக கூறுவதைபோலத் தான், முதல்வர் நாற்காலியில், இன்னார்தான் அமர வேண்டும் என்று விதி எழுதி வைத்திருந்தது. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டியது.

நம்பிய எம்எல்ஏக்கள்
தன்னை மீண்டும், தனிமரம் ஆக்கி விட்டார்களே, என்ற கோபத்தில், அதிமுக எம்எல்ஏக்களில், தங்கள் குடும்பத்திற்கு விசுவாசமானவர்களை திரட்டி அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார் தினகரன். இப்படித்தான் ஆளுநரிடமும் சென்று எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கொளுத்திவிட்டு பார்த்தார். ஆனால் அங்கும் விபரீதம் காத்திருந்தது. சிரித்தபடியே சீறி எழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கொறடா, அளித்த புகாரின் பேரில் ஆளுநரிடம் புகார் அளித்த 19 எம்எல்ஏக்களிடம், விளக்கம் கேட்கப்பட்டது. அதில் எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் விளக்கம் கொடுத்த நிலையில், மற்ற 18 பேரும் விளக்கம் கொடுக்காததால் அவர்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு
முன்பாவது தினகரனுக்கு மட்டும்தான் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இப்போது தினகரன் அவரை நம்பி வந்த 18 எம்எல்ஏக்கள் பதவி இழப்பிற்கும் காரணமாக மாறினார். எம்எல்ஏக்களுக்கான உரிமைகள், சலுகைகளை இழந்ததோடு, தொகுதியில் எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள முடியாமல், வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் 18 பேரும். இதையடுத்துதான் உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர செய்தார் தினகரன். 18 பேருக்கும் அடைக்கலம் கொடுத்தார். ஆனால், ஏற்கனவே தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகிய நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. மூன்றாவது நீதிபதி, சத்தியநாராயணனிடம், வழக்கு விசாரணைக்கு சென்று அவர் இன்று வழங்கிய தீர்ப்பில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்று கூறியுள்ளார். இதனால் எம்எல்ஏக்களின் பதவி பறிப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் போராட்டத்தில் மட்டுமல்லாமல், சட்டப் போராட்டத்திலும் தினகரனுக்கு அடுத்த தோல்வி.

ஆதரவாளர்கள் இருப்பார்களா?
இருந்தாலும் அவர் பதட்டத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் வழக்கமான பாணியிலேயே சிரித்தபடி பேட்டிகளை அளித்து வருகிறார். ஏனெனில் அவரிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. கயிறை கட்டி மலையை இழுத்துப் பார்க்கிறார். வந்தால் மலை.. போனால் கயிறு.. இவ்வளவுதான் தினகரன் பாலிசி. எனவே அவரால் சிரிக்க முடிகிறது. ஆனால் அவரை நம்பி வந்த 18 எம்எல்ஏக்களுக்கு, அவ்வப்போது ரிசார்ட்டுகளில் தங்கவைக்கப்படும் ஆனந்தத்தை தவிர மக்கள் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் இல்லாமல் தவித்து நிற்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் தினகரனுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆர்கே நகரில் பெற்ற வெற்றிதான். ஒருவேளை 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு கணிசமாக வெற்றி பெற்றாலே தவிர, தொடர்ச்சியாக அவரிடம் ஆதரவாளர்கள் தங்குவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறும். 20 தொகுதிகளுக்கு வரும் இடைத்தேர்தல்கள், தினகரன் அரசியல் வாழ்க்கையில், வாழ்வா சாவா என்பது போன்ற ஒரு போராட்டம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications