மகள் திருமண ஏற்பாடுகள் மும்முரம்... தேர்தல் பணிகள் முடிந்தும் ஓய்வில்லாமல் ஓடும் டிடிவி தினகரன்..!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயணித்த டிடிவி தினகரன், அடுத்ததாக தனது மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும், பணிகளையும் ஓய்வின்றி தொடர்ந்து வருகிறார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும் தஞ்சை மாவட்டம் பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் பேரனான ராமநாதனுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு என தேதி மாற்றப்பட்டது.
இப்போது சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டதால் ஜெயஹரிணி -ராமநாதன் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை இரு வீட்டாரும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். மணமகனின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக இருக்கிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகிய பிறகு சொல்லிக்கொள்ளும் வகையில் இதுவரை எந்த முக்கிய நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத சூழலில், டிடிவி தினகரன் மகள் திருமணத்தை முன்னின்று அவர் நடத்தி வைப்பார் எனத் தெரிகிறது. சசிகலா பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அது அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்படுகிறது.
இதனிடையே தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கும் அரசியல் மாற்றங்களை பொறுத்தே திருமண விழாவில் சசிகலாவின் உரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், கொரோனா பரவல் உள்ளிட்ட இன்னும் சில காரணங்கள் காரணமாக தலைமைக்கழகம், மாவட்ட, நகர, ஒன்றியச் செயலாளர்களுக்கு மட்டும் மகளின் திருமண அழைப்பிதழை அனுப்பும் திட்டத்தில் இருக்கிறாராம் டிடிவி.