டெல்லி தலையீடு அம்பலம்.. ஓபிஎஸ் ஓகே! மர்ம முடிச்சை அவிழ்த்த டிடிவி - எடப்பாடிக்கு எதிராக மெகா ப்ளான்
சென்னை: திமுகவை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பதாக தனியார் ஆங்கில நாளேட்டுக்கு டிடிவி தினகரன் பேட்டியளித்து இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோதிலும், ஓ.பன்னீர்செல்வம் மனம் தளராமல் வழக்குகள், அரசியல் நகர்வுகளை எடுத்து வருகிறார்.

ஓபிஎஸ் நகர்வுகள்
இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொதுக்குழு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருக்கிறார். அதேபோல். ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானதில் இருந்தே டெல்லியையும் மன்னார்குடியையும் மலைபோல் நம்பி தனது ஆதரவாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

டிடிவி தினகரன்
இந்த நிலையில்தான் தனியார் ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதில் ஓபிஎஸுடன் கைகோர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். "திமுகவை வீழ்த்துவதற்காக யாரோடும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம். அது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி." என்று அவர் கூறி இருக்கிறார்.

பாஜகவுடன் நெருக்கம்
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றது, அதிமுகவிலிருந்து மன்னார்குடி குடும்பம் ஒதுக்கப்பட்டதற்கு பாஜகவே காரணம் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. டிடிவி தினகரனும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், பாஜகவுடன் சேரவும் தயார் என அவர் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

பாஜக தலையீடு
அதேபோல் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள், உட்கட்சிப்பூசல்களில் பாஜகவில் தலையீடு இருந்ததாகவும், 2021 தேர்தலில் அதிமுகவில் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் அதை டிடிவி தினகரன் உறுதிபடுத்தி இருக்கிறார். "டெல்லியிலிருந்து சில நல விரும்பிகள் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எங்களிடம் பேசினார்கள். நான் எடப்பாடி பழனிசாமியை சேர்த்துக்கொள்ள மாட்டேன். என்ற நிபந்தனையை முன்வைத்தேன்." என்று டிடிவி கூறியுள்ளார்.

பழனிசாமி வேண்டாம்
"ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைய வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இணைய மாட்டேன். நடராசன் மரணமடைந்தபோது பரோலில் வந்த சசிகலாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான். அவருடன் சேர்ந்து செயல்பட எந்த வாய்ப்பும் இல்லை. அதிமுக பிரச்சனைக்குள் நான் இல்லை. நான் தனியாக கட்சி நடத்துகிறேன். தேர்தலில் வென்று அக்கட்சியை கைப்பற்றுவோம்.

திமுகவின் எதிர்க்கட்சி யார்?
திமுகவின் எதிர்க்கட்சி பாஜக அல்ல. திமுக உண்மையான எதிர்க்கட்சி ஜெயலலிதாவின் தொண்டர்களான நாங்கள்தான். எங்களை மதிக்கும் தேசிய கட்சியுடன் சேரத் தயார்." என்றார். தொடர்ந்து ஊடகங்களாலும், அரசியல் திறனாய்வாளர்களாலும் ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு இணையும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இதில் பாஜகவும் கூட்டு சேர்வதை தினகரனின் பேச்சு உறுதிபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications