நேரம் சரியில்லை.. சூழலும் ஒரே குழப்பம்.. கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்க தினகரன் முடிவு?
சென்னை: "கட்சியின் பொதுச் செயலாளர் சின்னம்மா, கட்சியின் துணை பொதுச் செயலாளர் நான்..." என அடிக்கடி கூறும் தினகரன் சிறிது காலத்திற்கு கட்சிப் பணிகளிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் அத்தனை பொறுப்பும் சசிகலா வசம் தானாகவே வந்தன. இதையடுத்து அவர் முதல்வர் கனவில் மிதந்த போது விதி விளையாடி தற்போது பெங்களூர் சிறையில் உள்ளார்.
இதை வைத்தே அதிமுகவை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் யோசனையில் சசிகலாவை தினகரன் ஓரங்கட்டியதாக அப்போது பல்வேறு தகவல்கள் வந்தன. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தவுடன் தினகரனின் பவரும் போய்விட்டது.
அதிமுக
எனினும் தினகரன் பக்கம் 18 எம்எல்ஏக்கள் இருந்தனர். இவர்களையும் தனது ஆதரவாளர்கள், 18 பேரின் ஆதரவாளர்களை வைத்து அமமுக என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியை வைத்தே அதிமுகவை மீட்கலாம் என நினைத்தால் அதுவும் கானல் நீராகிவிட்டது.
தகுதிநீக்கம் என்ற பேரிடி
சரி இந்த 18 பேரை வைத்தாவது முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை ஒரு வழி செய்யலாம் என நினைத்திருந்த தினகரனின் தலையில் 18 பேரும் தகுதி நீக்கம் என்ற பேரிடி இறங்கியது.
மறுபுறம்
இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி கட்சித் தாவல் ஒரு புறம், இன்னும் தாவ ரேஸில் இருக்கும் மற்ற நிர்வாகிகள் மறுபுறம் என தினகரனை சுற்றி இடியாப்ப சிக்கல் போல் பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே தினகரனின் திட்டமிடப்படாத செயல்பாடுகள், அதனால் ஏற்பட்ட தோல்விகள், குறைவான செயல்திறன் ஆகியவற்றால் சசிகலா கடும் அதிருப்தியில் இருந்தார்.
கடுமை
இந்நிலையில் கட்சி தாவல் தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால் எங்கே அமமுகவும் ஒன்றுமில்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவரை தொற்றிக் கொண்டது. இதையடுத்து பெங்களூருக்கு வந்து தன்னை பார்க்குமாறு அழைப்பு விடுத்தார். அப்போது தினகரனிடம் சசிகலா சற்று கடுமை காட்டியதாக தெரிகிறது.
ஜெ. மறைவு
இதையடுத்து கட்சியை காப்பாற்றவும், மேலும் மேலும் கட்சி தாவல்களை தடுக்கவும் ஒரே வழி, கட்சியை சசிகலாவின் கன்ட்ரோலில் விட்டுவிட்டு தினகரன் ஒதுங்கிவிடுவது என்ற கூறப்படுகிறது. ஜெ. மறைந்தவுடன் சசிகலா சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் அவர் கையில் அதிமுகவும் ஆட்சியும் இருந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
தினகரன்
அதுபோல் அமமுகவையும் அவர் பொறுப்பில் விட்டு அதிமுக, திமுகவினரின் புள்ளை பிடிக்கும் வேலைகளில் இருந்து நிர்வாகிகளை பாதுகாப்பது அவரால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு தினகரன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நிர்வாகம்
எனவே கட்சி பொறுப்பிலிருந்து விலகி விட்டு அமைதியாக ஆர் கே நகர் தொகுதி வேலைகளில் இறங்குவதுதான் இப்போதைக்கு சரிப்பட்டு வரும் நமக்கு வாய்த்த விதி என தினகரன் கருதுகிறாராம். ஆனால் கட்சியை சசிகலா பொறுப்பில் விட்டு விட்டால் சிறையில் உள்ள அவரால் எப்படி நிர்வகிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முணுமுணுத்தல்
ஒரு வேளை தனக்கு நம்பகமான ஒருவரை நியமித்து அவர்கள் மூலம் கட்சியை நிர்வகிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியும் நம்பிக்கைக்குரியவராகவே இருந்தார், இறுதியில் என்ன நடந்தது என நிர்வாகிகள் சிலர் முணுமுணுக்கின்றனர். எனவே இப்போதைக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை அமமுகவுக்கு தோதாக எதுவும் தட்டுப்படவில்லை என்பதே நிதர்சனம்.