“அம்மான்னு சொன்னாலே..” - அடேங்கப்பா... ‘அம்மா’ பாசத்துல எல்லோரையும் மிஞ்சிட்டாரே இவரு..!
சென்னை: சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது அன்னையரிடம் வாழ்த்துப் பெற்று, இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 'அம்மா' என்று சொன்னாலே அனைவரின் மனக்கண்ணிலும் அவரது உருவமே தோன்றுகிற அளவுக்கு இடம்பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தியாகத்தின் திருஉருவமாக, தாய்மை எனும் பெருங்குணத்தோடு அன்பு காட்டுகிற அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பும், பாசாங்கு இல்லாத பாசமும் கொண்டதுதான் தாய்மை. அத்தகைய தாய்மையோடு மறைந்தும் மறையாது தமிழக மக்களின் மனங்களில் வாழ்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 'அம்மா' என்று சொன்னாலே அனைவரின் மனக்கண்ணிலும் அவரது உருவமே தோன்றுகிற அளவுக்கு இடம்பிடித்தவரை இந்த நல்ல நாளில் நினைவுகூர்வோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் பயணித்து, தாய்மையை எந்நாளும் மகிழ்ந்து கொண்டாடுவோம். தூய்மையான தாயுள்ளத்தோடு நம்மிடம் அன்பு காட்டி, ஆசிர்வதிக்கும் அனைவரையும் போற்றி வணங்கிடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications